இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ரயில் பயணிகள் பின்வரும் விவரங்களை போலீஸில் தெரிவித்துள்ளனர்..
’ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகில் உள்ள ஜி.பட்டவாடா கிராமத்தைச் சேர்ந்த கலும் சத்ய நாராயணா தன் நண்பர்களுடன் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் தினமும் ரயிலில் பயணம் செய்து வேலைக்கு வருவார்கள்.
இந்நிலையில் நேற்று (02-02-18) ஜாம்ஷெட்பூரிலிருந்து ஆலப்புழா செல்லும் பொகாரோ எக்ஸ்பிரஸ் ரயிலில் கதவு அருகே நின்று கலும் சத்யா மற்றும் அவரின் நண்பர்கள் பயணம் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது, அங்கே வந்த திருநங்கைகள் சிலர் அவர்களிடம் பிச்சை கேட்டனர். கலும் சத்ய தன்னிடம் காசு இல்லை என்று கூறியுள்ளார். வாக்குவாதம் முற்றியது இதனால் ஆத்திரமடைந்த திருநங்கைகள் கலும் சத்ய நாராயணாவை தலையில் தாக்கி, ஓடும் ரெயிலிலிருந்து கீழே தள்ளி விட்டனர்.
இதில் அவர் உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். அவரைக் காப்பாற்றுவதற்காக ரயிலிலிருந்து குதித்த அவரின் நண்பர் காரம் வீரபாபுவும் படுகாயமடைந்தார். இந்தச் சம்பவத்தை பார்த்து ஆடிப்போன ரயில் பயணிகள் உடனடியாக அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். ரயில் நின்றதும் திருநங்கைகள் கீழே இறங்கி ஓடிவிட்டனர்’. என்று தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த ரயில் பயணிகள் ஊத்தங்கரை மற்றும் சாமல்பட்டி ரயில் நிலையங்களுக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் ரயில்வே போலீஸார் அங்கு விரைந்து வந்தனர். கலும் சத்ய நாராயணாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த காரம் வீரபாபுவை சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த சேலம் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி சாமல்பட்டிக்கு விரைந்து வந்து கொலை நடந்த இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.