மிதக்கும் கோட்டையில் வாழும் வயதான தம்பதி!

“உங்கள் கோட்டை வாழ்க்கையைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என மக்கள் கேட்டால் என்ன சொல்வது”
……..
“இது சாதாரணமான வாழ்க்கை முறை அல்ல”
………

“தேங் யூ வெரி மச்” என்று ஒரு தம்பதியினரின் உரையாடல் நடந்து கலகலவெனச் சிரிப்புச் சத்தம் கேட்கிறது. அறுபது வயதைத் தாண்டிய அந்தத் தம்பதியின் சிரிப்புச் சத்தத்தைக் கேட்கத்தான் அங்கே ஆட்கள் யாருமில்லை. ஆம், அவர்களைச் சுற்றி அங்கே யாரும் இல்லை. தாங்கள் உண்ண காய்கறிகளையும் மீன்களையும் பிடித்துக் கொண்டு தங்கள் கோட்டைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். அப்போதுதான் இவர்கள் மேற்சொன்னபடி பேசி சிரித்துக் கொள்கிறார்கள்.

கோட்டை

Photo – boredpanda.com

அது கனடாவின் வான்கோவர் கடற்கரை பகுதியில் உள்ள ஒரு தீவுப்பகுதி. நகர வாழ்க்கையை வீசியெறிந்துவிட்டு அந்தக் கடல் முகத்துவாரத் தண்ணீரில் கோட்டையை அமைத்து வாழ்ந்து வருகிறார்கள், அந்தத் தம்பதியினர். அவர்கள் வசிக்கும் வீட்டை அவர்கள் கோட்டை என்றுதான் அழைக்கிறார்கள். பசுமை வீடு, நடன அரங்கம், கலைக்கூடம், விருந்தினர்களுக்கான கலங்கரை விளக்கக் கோபுரம்,  ஸ்டுடியோ, சோலார் மற்றும் ஜெனரேட்டர் மின்சாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய 12 அறைகள் கொண்ட பரந்து விரிந்த ஒரு கட்டிடத்தைக் கோட்டை என்றுதானே சொல்ல வேண்டும். இதனை வடிவமைத்து வாழும் தம்பதியின் பெயர் வெய்ன் ஆடம்ஸ் (66) மற்றும் கேத்ரின் கிங் (59). இந்தக் கோட்டை கடற்கரை கழிமுகப் பகுதியில் இருக்கும் நீரில் மிதக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது இதன் மற்றொரு சிறப்பு. எவ்வளவு தண்ணீர் வந்தாலும் அதற்கு ஏற்றதுபோல கோட்டை தன்னை உயர்த்தியும், தாழ்த்தியும் தானாக அமைத்துக் கொள்ளும். 1992-ம் ஆண்டு மிதக்கும் கோட்டையை வெய்ன் ஆடம்ஸ் அமைத்தார்.

காய்கறிகள்

Photo – boredpanda.com

இந்தக்கோட்டை முதன்முதலில் சாதாரணமாகத்தான் கட்டினார்கள். பின்னர் அங்கேயே வாழ்க்கையை வாழ விரும்பிய தம்பதிகள் இருவரும் கோட்டையாக மாற்றிக் கொண்டார்கள். தன்னுடைய கோட்டையை ரசிக்க வரும் விருந்தினர்களை உபசரிக்க விருந்தினர்களுக்கான கூடாரமும் அமைத்தனர். வெய்ன் ஆடம்ஸ் காவலர் மற்றும் ஓவியராக இருந்தவர். கேத்ரின் கிங் ஓவியர், நடன கலைஞர், எழுத்தாளர் மற்றும் இசைக்கலைஞர். வயதான தம்பதிகளின் இறுதிக்காலம் ஓவியம் வரைதல், எழுதுதல் மற்றும் விளையாடுதல் என இப்படித்தான் கழிகிறது. உணவுக்காக அரை ஏக்கரில் நிலத்தில் பயிரிட்டுக் கொள்கிறார்கள். உணவுக்காகத் தேவைப்படும் மீன்களை வெய்ன் ஆடம்ஸ் தனது மனைவி கேத்ரின் கிங்குடன் அவ்வப்போது படகில் சென்று பிடித்துக் கொள்கிறார். மழை எப்போது பெய்தாலும் குடிநீராக சேமித்துக் கொள்கிறார்கள். அவர்கள் தீவில் உள்ள தண்ணீரில் வாழ்ந்து வந்தாலும் கோடைக்காலத்தில் அருகில் இருந்து வரும் தண்ணீரால் கோட்டையும், அதனால் தம்பதியும் எப்போதும் மிதந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

தனியாக வாழும் தம்பதி

Photo – boredpanda.com

இக்கோட்டையைச் சுற்றிலும் 14 சூரிய விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அதனால், இரவில் எப்போதும் கோட்டை மிளிர்ந்து கொண்டே இருக்கும். கோடைக்காலத்தில் இந்தத் தம்பதிகளைப் பார்க்க அதிகமான நண்பர்கள் வருகை தருகின்றனர். இதுதவிர, இப்படி ஒரு தம்பதியினர் வாழ்கிறார்களா எனக் கேள்விப்பட்டும் இங்கு அதிகமான விருந்தினர்கள் வருகின்றனர். இந்தக் கோட்டையில் இவர்களுக்குத் துணை இவர்கள் வளர்க்கும் நாய்கள் மட்டும்தான். இக்கோட்டையில் வெய்ன் ஆடம்ஸ் எந்தத் தொலைத்தொடர்பு சாதனத்தையும் வைத்துக் கொண்டதில்லை, இனியும் வைத்துக் கொள்ளப்போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். இந்த மிதக்கும் கோட்டைக்குச் சென்று திரும்பியவர்கள் அனைவரும் சொல்வது “இவ்வளவு நாட்கள் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள்” என்றுதான் அந்தத் தம்பதியினரைப் பற்றி அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். மரணம் வரைக்கும் அங்கேயே இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் இறுதி ஆசை. இவ்வளவு வயதாகியும் வெய்ன் ஆடம்ஸ், கேத்ரின் கிங் ஆகிய இருவருக்கும் இந்த வாழ்க்கையைப் பற்றிய சிறிதும் கவலை இல்லை. அவர்களது முகத்தில் எப்போதும் சிரிப்பு இருந்து கொண்டே இருக்கிறது.

இறுதி வரை தொடரட்டும் அவர்களது மகிழ்ச்சி!