தினகரனுக்கு ஆசி வழங்கிய விபூதி சித்தர்! – ”அந்த அம்மா பெயரைக் காப்பாற்று!’’

ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏவான டி.டி.வி. தினகரன், வேலூர் மாவட்டம் காட்பாடி அருகிலுள்ள மகாதேவ மலையில் இருக்கும் மகானந்த சித்தரிடம் ரகசியமாக ஆசி பெற்றுள்ளார்.

இதுகுறித்து தினகரனுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தோம். ’’மகாதேவ மலையில் இருக்கும் மகானந்த சித்தரிடன் தினகரன் இன்று (25.1.2018) ஆசிபெற்றார். அவரது வருகை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது உண்மைதான். விபூதி சித்தர் என்றழைக்கப்படும் மகானந்த சித்தரின் காலில் விழுந்து ஆசிபெற்ற தினகரனிடம், ’நீ ஏன் என் காலில் விழுகிறாய். இன்னும் கொஞ்ச நாளில் இந்தத் தமிழ்நாடே உன் காலில் விழப்போகிறது. அந்த அம்மா பெயரைக் காப்பாற்று’ என்று அவர் ஆசி வழங்கினார்’என்றனர். பொதுவாக விபூதி சித்தரிடம் ஆசிபெறுபவர்களை அவர், வாடா, போடா என்று ஒருமையில் பேசுவதுதான் வழக்கம் என்கிறார்கள். தினகரன் வருகை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தும், அவர் வந்த தகவலையறிந்து ஆதரவாளர்கள் சிலர் வரவேற்பளித்தனர்.