பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து சென்னை ஹை கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அரசுப் பேருந்து கட்டணங்களை உயர்த்தி கடந்த 19ஆம் தேதி தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது.
இந்த அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி திருவண்ணாமலைச் சேர்ந்த முனிகிருஷ்ணன் என்பவர் சென்னை ஹை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், மோட்டார் வாகன சட்டத்தை பின்பற்றாமல் திடீரென்று கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளதால் இந்த அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாள்தோறும் அதிகரித்து வரும் டீசல் விலையையும் கணக்கில் எடுத்து கொண்டு தான் இந்த கட்டண உயர்வு நடந்துள்ளது என்கிறது அரசு தரப்பு
புதிய பேருந்துகள் வாங்குதல், எரிபொருள் செலவு, பணியாளர் ஊதிய உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படுவதைத் தவிர்க்க முடியாததாகிவிட்டதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து தஞ்சாவூர், திருப்பூர், திருவண்ணாமலை, தேனி, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் கவின் கலைக் கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் வகுப்புகளை முடித்துக்கொண்டு மனிதச் சங்கிலி மற்றும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து மாணவர்களின் அறிவிப்பில்,
பேருந்துக் கட்டண உயர்வால் கூலி வேலை செய்யும் ஏழை மக்கள் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள்.
குறைந்தபட்சக் கட்டண உயர்வு அறிவித்திருந்தால்கூட பரவாயில்லை. ஆனால் 2 மடங்காகக் கட்டணத்தை உயர்த்தியது, ஏழை மக்களுக்கும், மாணவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
தமிழ்நாடு அரசு பேருந்துக் கட்டண உயர்வை வாபஸ் வாங்குவதோடு, குறிப்பிட்ட காலத்திற்குள் மீண்டும் கட்டணத்தை உயர்த்த கமிட்டி அமைத்து ஆலோசித்துவருவதையும் நிறுத்த வேண்டும்.
இல்லையென்றால் ஜல்லிக்கட்டு போல இதற்கும் மிகப் பெரிய போராட்டம் நடத்துவோம். தமிழ்நாடே ஸ்தம்பிக்கும் என கூறியுள்ளனர்..