பொங்கல் பண்டிகையையொட்டி, பிரிட்டன், நார்வே, கனடா நாட்டு பிரதமர்கள் தமிழில் பொங்கல் வாழ்த்துக் கூறி, உலகத் தமிழ் மக்களை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கினர்.
தற்போது, கிரிக்கெட் மைதானத்திலும் தமிழ் நுழைந்துள்ளது. பொதுவாக மைதானங்களில் வீரர்கள் ஆங்கிலத்தில் உரையாடுவதே வழக்கம். இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் இருவர் இடம் பெற்றிருந்ததால், சில சமயங்களில் தமிழில் பேசிக்கொள்வது வழக்கம்.
murali
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கர்நாடகாவைச் சேர்ந்த ராகுலுடன் முரளி விஜய் தமிழில் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
செஞ்சூரியன் நகரில் நடைபெற்று வரும் 2 வது டெஸ்ட் போட்டியில், இந்தியாவுக்கு 287 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
முரளி விஜய்யும் ராகுலும் தொடக்க வீரர்களாகக் களம் இறங்கினர். ஓர் ஓவரில் தொடர்ச்சியாகப் பந்து பேட்ஸ்மேனின் காலுக்குள் வீசப்பட்டது.
அந்த சமயத்தில் ராகுலை எச்சரிக்கும் வகையில், `மச்சான் இந்த ஓவர் முழுக்க பந்தை உள்ளேதான் போடுறாங்க’ என்று தமிழில் பேசி எச்சரித்தார்.
இருப்பினும், நான்காவது நாள் ஆட்டத்திலேயே ராகுல் 4 ரன்னிலும் முரளி விஜய் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ராகுலுடன் முரளி விஜய் தமிழில் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐந்தாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 70 ரன்களை எடுத்து தடுமாறி வருகிறது.