ஜெயலலிதா எப்போது இறந்தார் என்பது குறித்த அதிர்ச்சி தகவலைச் சசிகலாவின் சகோதரர் திவாகரன் இன்று வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் 2016-ம் தேதி செப்டம்பர் 22-ம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா 75 நாள் சிகிச்சைக்குப் பின்னர், டிசம்பர் 5-ம் தேதி மாரடைப்பால் இறந்துவிட்டதாக அப்போலோ மருத்துவமனை அறிவித்தது.
இதனிடையே, ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தற்போது இருக்கிற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கூறினர்.
இதையடுத்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தது தமிழக அரசு.
இந்த விசாரணை நடந்துகொண்டிருக்கும் நிலையில் திடீரென, அப்போலோவில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ காட்சியைத் தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கினார்.
இந்த விவகாரம் அடங்குவதற்குள் சசிகலாவின் சகோதரர் திவாகரன், ஜெயலலிதா மரணம் தொடர்பாக இன்று புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.
மன்னார்குடியில் நடந்த எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவில் அவர் பேசும்போது, ஜெயலலிதா கடந்த 2016-ம் தேதி டிசம்பர் 4-ம் தேதியே இறந்துவிட்டார்.
அப்போலோ மருத்துவமனை பாதுகாப்புக்காக ஒரு நாள் தாமதமாக மரணம் அறிவிக்கப்பட்டது.
உடனடியாக ஏன் அறிவிக்கவில்லை என்று மருத்துவமனை நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டபோது, எங்களது மருத்துவமனையின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் எனக் கூறினார்கள்” என்று தெரிவித்தார்.
ஜெயலலிதா, டிசம்பர் 5-ம் தேதி இரவு 11.30 மணியளவில் மரணம் அடைந்தார் என்று அப்போலோ நிறுவனம் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.