தைத்திருநாளில் கோலாகலம்! பார்ப்போரை பரவசத்தில் ஆழ்த்திய பட்டத் திருவிழா!!

தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பிக்கும் வகையில், யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் ‘பட்டப்போட்டித் திருவிழா 2018’ நேற்று சிறப்பாக நடைபெற்றது.வல்வெட்டித்துறை விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகத்தினால் பட்டப்போட்டித் திருவிழா 2018 ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.பட்டப்போட்டித் திருவிழாவைக் கண்டுகளிப்பதற்காக வல்வை உதயசூரியன் கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.போட்டியில் பல்வேறு வடிவங்களைக் கொண்ட 68 வகையான விசித்திர பட்டங்கள் பறக்கவிடப்பட்டன.அதில் முதலாம் இடத்தினை பறக்கும் மேடையில் பொம்மலாட்டம் பெற்றுள்ளது. இப் பட்டத்தினை ஏற்றிய ம.பிரசாந்தன் என்பவருக்கு 15 ஆயிரம் ரூபாவும், 1 பவுண் தங்க நாணயமும் பரிசாக வழங்கப்பட்டது. இப் பட்டம் மூன்றாவது தடவையாகவும் முதல் பரிசிலினை பெற்று வருகின்றது.இரண்டாம் இடத்தினை அன்னப்படகு பெற்றுள்ளது இப்பட்டத்தினை ஏற்றிய ம.ஆரோக்கி என்பவருக்கு அரைப்பவுண் தங்கக் காசும், 10 ஆயிரம் ரூபாவும் பரிசாக வழங்கப்பட்டது.முன்றாம் இடத்தினை உருமாறும் ரான்ஸ்போமர் பெற்றுள்ளது. இப்பட்டத்தினை ஏற்றிய வெ.ராஜேந்திரன் என்பவருக்கு 5 ஆயிரம் ரூபாவும், சைக்கிள் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது.இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் மகிந்த அமரவீர, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், சிறப்பு விருந்தினர்களாக  வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்,  ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.வானத்தில் பட்டங்கள் காட்டிய வர்ணஜாலங்கள் பார்வையாளர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்திருந்தது.