தமிழகத்தின் முதல் பா.ஜ.க தலைவர் நாராயண் ராவ் மரணம் அடைந்தார்.
தமிழக பா.ஜ.கவின் முதல் மாநில தலைவராக கடந்த 1980 ம் ஆண்டு முதல் 1985 ம் ஆண்டு வரை செயல்பட்டவர் கே.நாராயண் ராவ்.
சென்னை மேற்கு தாம்பரத்தில் வசித்து வரும் இவர் நேற்று அதிகாலை 1.50 மணியளவில் மரணம் அடைந்தார்.
அவருடைய உடலுக்கு பா.ஜ.க தலைவர்கள் நேற்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். அவரது இறுதிச்சடங்கு, இன்று காலை 10 மணிக்கு நடக்கிறது.
இவரது மறைவிற்கு பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டிருப்பதாவது: அரசியலில் அனைவராலும் மதிக்கப்பட்ட ஒரு சர்வ கட்சி தலைவர் நாராயண் ராவ்.
அவரது மறைவு தமிழக பா.ஜ.வுக்கு பேரிழப்பாகும் என்று கூறியுள்ளார்.
மேலும் மத்திய இணைஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், பா.ஜ.கவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் ஜனசங்கம் காலம் தொட்டு இன்றளவும் என்னைப் போன்ற பலருக்கும் வழிகாட்டியாக திகழ்ந்த நாராயண் ராவ் இயற்கை எய்தினார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த மனவேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன்.
அவருடைய ஆன்மா நற்கதி அடையபிரார்த்திக்கின்றேன் இவ்வாறு கூறியுள்ளார்.