தங்களது நாடு மீது விதிக்கப்பட்ட ஐ.நாவின் புதிய பொருளாதாரத் தடைகள் போருக்கான செயல் என வட கொரியா விவரித்துள்ளதாக அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வட கொரியா நடத்திய சமீபத்திய பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைக்கு பதிலடியாக அந்நாடு மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வெள்ளிக்கிழமையன்று ஒருமனதாக வாக்களித்துள்ளது. அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட இந்தத் தீர்மானம் வட கொரியாவின் பெட்ரோல் இறக்குமதியை 90 வரை குறைக்கும் நடவடிக்கைகளை உள்ளடக்கியுள்ளது.
ஏற்கனவே வட கொரியா மீது அமெரிக்கா, ஐ.நா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எனினும் புதிய தடைகளில்:- வட கொரியாவின் பெட்ரோலிய பொருட்களின் இறக்குமதியை ஒரு வருடத்திற்கு 5,00,000 பீப்பாய்களாகக் குறைப்பது, கச்சா எண்ணெய்யை ஒரு வருடத்திற்கு 4 மில்லியன் பீப்பாய்களாகக் குறைப்பது, இயந்திரங்கள் மின் உபகரணங்கள் உள்ளிட்ட வட கொரியா பொருட்களின் ஏற்றுமதிக்குத் தடை.
மற்றும் இந்தத் தீர்மானத்தின்படி வெளிநாடுகளில் வேலை செய்யும் வட கொரியர்கள் 24 மாதத்தில் நாடு திரும்ப வேண்டும். வட கொரியாவின் முக்கிய ஆதாரமாக இருக்கும் வெளிநாட்டு பணத்தை கட்டுப்படுத்தும் விதமாக இது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.