ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப் படையினர் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுப் படைகளுடன் புரட்சிப் படையினர் நடத்திவரும் மோதலில் பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சனா நகரில் காலரா எனப்படும் வாந்திபேதி நோய் படுவேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இதையடுத்து ஆட்சி நிர்வாகத்துக்கு பொறுப்பேற்றுள்ள ஹவுத்தி அரசின் நிர்வாகம் சனா நகரில் அவசர நிலை சட்டத்தை பிரகடணப்படுத்தியது.
சனாவை கடந்து அருகாமையிலுள்ள அமானத் அல்-செமா மாகாணம், ஹோடெய்டா, டய்ஸ் மற்றும் ஏடென் நகரிலும் காலரா நோய் வேகமாக பரவியது.
உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் முகாம்களில் தங்கியுள்ள புலம் பெயர்ந்த மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. உயிர் காக்கும் மருந்துகளும் ஏராளமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி ஏமனில் சுமார் பத்து லட்சம் மக்கள் காலரா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. சுமார் 76 லட்சம் மக்கள் காலரா அபாயத்துக்குட்பட்ட பகுதிகளில் வசித்து வருவதாகவும் இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. நாட்டில் வாழும் மொத்த மக்கள்தொகையான 2.6 கோடி மக்களில் 1.7 கோடி பேர் பாதுகாப்பான குடிநீர் மற்றும் போதிய ஊட்டச்சத்தான உணவு கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.