என்ன வருகிறதென்றே தெரியவில்லை.. விமானங்கள் ரத்து.. அதிகாலையில் இருந்தே அவதியில் சிக்கி தவிக்கும் சென்னை..!!

கடந்த சில வாரங்களாக நாட்டின் தலைநகர் பனியில் சிக்கி தவித்து வந்த நிலையில் இன்று தமிழ்நாட்டின் தலைநகரும் பனி மூட்ட சிக்கலுக்கு ஆளாகி இருக்கிறது.

beachடெல்லி மற்றும் அதைச் சுற்றி உள்ள நொய்டா, சண்டிகர் மற்றும் பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் உள்ளிட்டமாநிலங்களின் சில பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கடும் பனி மூட்டம் காணப்படுகிறது. அத்துடன் காற்று மாசும் அதிகரித்து எங்கு பார்த்தாலும் புகை மூட்டமாக காணப்படுகிறது.

டெல்லியில் உள்ள 18 காற்று மாசு கண்காணிப்பு மையங்களில் காற்று தர குறியீடு (ஏக்யூஐ), ஒரு கன மீட்டருக்கு அபாய அளவாக 475 மைக்ரோகிராம் ஆக பதிவாகி உள்ளது.

இந்த நிலையில் தமிழகத்திலும் இன்று கடும் பனிமூட்டம் தொடங்கி உள்ளது. டெல்லியை போல மாசுபாடு அதிக அளவில் இல்லாமல் இது ஈரப்பதத்தால் ஏற்படுவது தான் என்று கூறப்படுகிறது.

இதனால், சென்னை வரும் 12 விமானங்கள் பனி மூட்டத்தால் திருப்பிவிடப்பட்டுள்ளன. எதிரில் என்ன வருகிறது என்று கூட தெரியாத அளவிற்கு பனி மூட்டம் நிலவுகிறது.

சென்னை வளசரவாக்கம், போரூர், ராமாபுரம் மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம் அருகே பொத்தேரி, மறைமலைநகர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பனிமூட்டம் நிலவியது.

பனி மூட்டம் காரணமாக ஜி.எஸ்.டி சாலை உள்ளிட்ட சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.

பனிமூட்டத்தால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் விடிந்த பின்னரும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டப்படி செல்கின்றனர்.

கடும் பனிமூட்டத்தால் சென்னையில் தரையிறங்க முடியாமல் சில விமானங்கள் பெங்களூரு திருப்பி விடப்பட்டன. லண்டனிலிருந்து சென்னை வரும் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.