மும்பை : தாயைக் கொன்றுவிட்டு தலைமறைவாக இருந்த தஷ்வந்த் மும்பையில் கைது செய்யப்பட்ட நிலையில் கைவிலங்கிட்ட நிலையில் கழிவறை செல்வதாக சொல்லிவிட்டு தப்பியோடியுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதத்தில் 7 வயது சிறுமி ஹாசினியை சென்னை மாங்காட்டில் பாலியல் கொடுமை செய்து எரித்துக் கொன்றவர் தஷ்வந்த்.
இந்த குற்ற வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட தஷ்வந்த் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது. ஆனால் தஷ்வந்த் மீதான குண்டர் சட்டத்தை நிரூபிக்கும் விதமாக காவல்துறை தரப்பில் சரியான ஆவணங்கள் தாக்கல் செய்யப்படாததால் குண்டர் சட்டம் ரத்தானது.
இதனையடுத்து தஷ்வந்திற்கு ஜாமின் வழங்கியும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்நிலையில் ஜாமினில் வெளிவந்திருந்த தஷ்வந்த் மாங்காட்டில் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்தார்.
ஜாலியான வாழ்க்கைக்காக தாயாரிடம் பணம் கேட்டு நச்சரித்து வந்துள்ளார் தஷ்வந்த். ஆனால் அவருக்கு பணம் தர தாய் சரளா மறுத்ததாக தெரிகிறது.
இதனிடையே கடந்த சனிக்கிழமையன்று வீட்டில் தனியாக இருந்த போது தாய் சரளாவை கொன்றுவிட்டு நகை பணத்துடன் தஷ்வந்த் எஸ்கேப் ஆகிவிட்டார்.
தஷ்வந்த்தை தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில் மும்பையில் பாலியல் தொழில் ஏஜென்ட் ஒருவர் மூலம் தஷ்வந்தை மாறுவேடத்தில் சென்றிருந்த போலீசார் நேற்று மாலையில் மடக்கிப் பிடித்தனர்.தஷ்வந்த் மும்பை பாந்த்ரா மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை சென்னை அழைத்து வர அனுமதி அளிக்கப்பட்டது. இன்று மாலையில் தஷ்வந்தை விமானம் மூலம் அழைத்து வருவதற்காக போலீசார் மும்பை விமான நிலையம் அழைத்து வந்துள்ளனர்.
விமான நிலையத்தில் கழிவறை சென்று வருவதாக கைவிலங்கோடு சென்ற தஷ்வந்த், வெகுநேரமாகியும் திரும்பவில்லை. இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் போலீசார் கழிவறையில் பார்த்த போது தஷ்வந்த் தப்பியோடியது தெரியவந்துள்ளது