அம்ருதா சொல்வது அனைத்தும் பொய்……அதிர்ச்சியை ஏற்படுத்திய ஜெ., அண்ணன்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மகள் பிறந்தது உண்மை என்றும், பெங்களூரைச் சேர்ந்த அம்ருதா தான் மகள் என்றும் ஜெ., உறவினர் ஒரு பரபரப்பு தகவலை வெளியிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் தோழியான கீதா, அம்ருதா தான் ஜெயலலிதாவின் மகள் என்றும் கூறி வந்தார்.

இந்நிலையில் மறைந்த ஜெயலலிதாவுக்கு அண்ணன் உறவு முறையான வாசுதேவன், ஜெயலலிதாவிற்கு மகள் இருக்கிறார் என்றும் அது பற்றிய முழு விவரம் சசிகலாவுக்கும் நடராஜனுக்கும் மட்டும் தான் தெரியும் என்றும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

இது குறித்து வாசுதேவன் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது அவர் கூறியதாவது: நான், ஜெ.,வின் தந்தை ஜெயராமனுக்கும் அவரது முதல் மனைவியான ஜெயம்மாளுக்கும் பிறந்த ஒரே மகன் வாசுதேவன்.

அந்த முறைப்படி எனக்கு ஜெயலலிதா தங்கை ஆகிறார். எனது தந்தையின் இரண்டாவது மனைவி தான் வேதம்மாள் என்கிற சந்தியா. அவர்களுக்கு பிறந்தவர்கள் ஜெயக்குமார், ஜெயலலிதா.

ஜெ.,வின் அம்மா வேதம்மாளுக்கும், சினிமா ஆர்ட் டைரக்டர் தாமோதரப்பிள்ளைக்கும் பிறந்த மகள் தான் சைலஜா என்று செய்திகள் வெளியானது.

இதனையடுத்து நான் சைலஜாவை சந்திக்க முயற்சித்தேன். ஆனால், எனது ஏழ்மை மற்றும் வயது முதிர்வு காரணமாக அவரை என்னால் சந்திக்க முடியவில்லை.

ஆனால், என்னைப் பற்றி அறிந்த சைலஜா தனது குடும்பத்தோடு என்னை பார்க்க வந்திருந்தார். அவருடைய பிறப்பு மற்றும் குடும்ப வரலாறு குறித்து அனைத்தையும் என்னுடன் பகிர்ந்து கொண்டார்.

அவர் என்னிடம் சொன்ன அனைத்தும் உண்மையாக இருந்ததால் அவர் நிச்சயம் ஜெயலலிதாவின் தங்கை என்பதை நான் உணர்ந்தேன்.

அப்போது சைலஜாவோடு அம்ருதாவும் வந்திருந்தார். சைலஜா தனது மகள் அம்ருதாவை என்னிடம் அறிமுகம் செய்தார். அச்சந்திப்பிற்கு பின்னர் சைலஜா குடும்பத்திற்கும் எங்களுடைய குடும்பத்துக்கும் நெருக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில் சைலஜா உடல்நலக் குறைவால் காலமானார். அதனையடுத்து கடந்த மார்ச் மாதம் அம்ருதாவின் தந்தை பார்த்தசாரதியும் மரணம் அடைந்தார். பார்த்தசாரதி மரணப்படுக்கையில் இருந்தபோது நான்கு நாட்கள் நான் பெங்களூர் அம்ருதா வீட்டில் இருந்தேன்.

அப்போது எங்களது தந்தையின் உறவினர்களான ரஜினிநாத் மற்றும் லலிதா ஆகியோரை அம்ருதாவிற்கு அறிமுகம் செய்து வைத்தேன். ரஜினிநாத்தின் மகள் அமெரிக்காவில் தான் இருக்கிறார். அவருடைய வீட்டுக்கு அம்ருதா சென்று வந்தார்.

தற்போது அவர்கள் இருவரும் தான் அம்ருதாவை ஜெ.,வின் மகள் என்று சொல்லி இருக்கிறார்கள். இது முற்றிலும் தவறான தகவல் என்று வாசுதேவன் கூறினார்.

மேலும் அவர், ஜெயலலிதாவிற்கு பிரசவம் பார்த்தது, லலிதாவின் பெரியம்மா என்று கூறுவதும் தவறான தகவல் என்றும் ஜெ., எங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் யாருடனும் தொடர்பு வைத்துக் கொள்ளவில்லை என்றும் கூறினார்.

நான் சென்னை வரும்போதெல்லாம் நடிகர்கள் நம்பியார், சிவாஜி மற்றும் நடிகை ராஜ சுரோக்சனா உள்ளிட்ட பலரை சந்திப்பேன்.

அப்போது அவர்கள் என்னிடம் ஜெ.,வுக்கும் ஷோபன் பாபுவுக்கும் ஐதராபாத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்ததாக கூறி இருக்கிறார்கள். பின்னர், அந்த பெண் வெளிநாட்டில் திருமணம் செய்து கொடுத்துள்ளதாக கேள்விப்பட்டேன்.

ஆனால், அனைத்து உண்மைகளும், சசிகலா மற்றும் நடராஜனுக்கு நிச்சயம் தெரியும். அவர்கள் தான் தமிழக மக்களுக்கும் ஜெ.,வின் உறவினர்களாகிய எங்களுக்கும் சொல்ல வேண்டும் என்று வாசுதேவன் கூறினார்.