முன்னர் எல்லாம் மாவீரர் நாள் நெருங்கி விட்டால் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் அறிக்கையை எதிர்பார்த்து தமிழ் மக்களும், முழு உலகமும் காத்திருக்கும்.தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கை நிலைப்பாட்டை விளக்கும் அறிக்கையை தலைவர் பிரபாகரன் அவர்கள் அன்றுதான் வெளியிடுவார். ஆனால் கடந்த 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு மாவீரர் நாளில் தலைவர் பிரபாகரனின் அறிக்கையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மக்களுக்கு ஏமாற்றம் தான் கிட்டும்.
இம்முறையும் அப்படித்தான் நடக்கும் என்று மக்கள் எல்லோரும் கருதி அமைதியாக மாவீரர் நாள் மண்டபங்களுக்கு சென்றார்கள். கடந்த எட்டு வருடங்களாக நடைபெறுவது போன்று இம்முறையும் தேசியத் தலைவரின் உரை வெளிவரும் நேரத்தில் எந்த உரையும் வெளிவரவில்லை. எனவே மக்களும் வழமைபோல் விளக்குகளை ஏற்றி விட்டு, மாவீரர்களின் படங்களுக்கு மலர் தூவி விட்டு வெளியில் செல்லத் தயாராகிய போது திடீரென ஒரு குரல் மண்டபங்களில் ஒலித்தது.
‘எனது அன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய தமிழீழ மக்களே,’ என்று அந்தக் குரல் ஒலித்த போது எல்லோருமே திகைத்துப் போய் நின்றார்கள். தேசியத் தலைவரின் உரை வெளிவந்து விட்டது என்று எல்லோரும் தமது செவிகளை கூர்மையாக்கிய போது, யாரோ ஒருவர் தேசியத் தலைவரின் பாணியில் ஆற்றிய உரை மண்டபத்தில் ஒலிபரப்பப்படுவது புரிந்தது.
இது பற்றி அதிர்வு புலன் விசாரணை செய்த போது ஒரு திடுக்கிடும் தகவல் கிடைத்தது. சுவிற்சர்லாந்தில் கடந்த வருடம் இரகசியமாக கூட்டம் ஒன்று நடைபெற்றதாம். இந்தக் கூட்டத்தில் கூடிய ஐந்து பேர் தீர்மானம் ஒன்றை எடுத்தார்களாம். பூனையில்லா ஊரில் எலிகளுக்குக் கொண்டாட்டம் என்ற கதையாகப் புலிகள் மறைந்திருக்கும் இன்றைய காலத்தில் இந்த எலிகள் தாங்கள் தான் புலிகளின் தலைமைச் செயலகம் என்று அறிவித்தார்களாம்.
பின்னர் ஒவ்வொரு மாவீரர் நாளன்றும் தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயரில் அறிக்கை விடுவதென்றும், அந்த அறிக்கை தங்களால் தெரிவு செய்யப்படும் ஒருவரால் ஒலிப்பதிவு செய்யப்பட்டு ஒவ்வொரு மாவீரர் நாள் மண்படங்களிலும் ஒலிபரப்பப்பட வேண்டும் என்றும் வெளிநாடுகளில் இயங்கும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் புலிகளின் ஏனைய கட்டமைப்புக்களுக்கு இவர்கள் உத்தரவு பிறப்பித்தார்களாம். இதனை அவர்களும் ஏற்றுக் கொண்டார்களாம்.
அப்படி இந்த ஐந்து பேரின் திரைக்கதை, வசனத்தில் உருவாகி, இவர்களால் தெரிவு செய்யப்பட்ட ஒருவரால் ஒலிப்பதிவு செய்யப்பட்ட அறிக்கை தான் இம்முறை மாவீரர் நாள் மண்டபங்களில் ஒலிபரப்பப்பட்டுள்ளது.
இதை விட கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் ஏதாவது இருக்க முடியுமா?
தலைவர் பிரபாகரனால் கட்டுக் கோப்புடன் வளர்க்கப்பட்ட இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு. அந்த இயக்கத்தின் கடிதத் தலைப்பைக் களவெடுத்துத் தலைவர் அறிக்கை விடும் நாளில் தாங்கள் நினைத்தபடி ஐந்து காகிதப்புலிகள் அறிக்கை விட, அதை மாவீரர் நாள் மண்டபங்களில் ஒலிபரப்புச் செய்வதை விட தலைவருக்கு இவர்கள் வேறு என்ன துரோகத்தனம் செய்ய முடியும்? இவர்கள் யார் என்பது பற்றிய விபரங்களை நன்கு அறிந்திருந்தும் அது பற்றி எதுவும் எழுதாது சங்கதி௨4, ஈழமுரசு ஆகியவை மௌனம் காக்கின்றன. உருத்திரகுமாரனின் கடிதங்களை எல்லாம் வெளியிட்டு புட்டு வைத்த ஆதித்தன், சேரமான் போன்றவர்கள் ஏன் அமைதியாக இருக்கின்றார்கள்? இவர்களும் இந்தத் துரோகத்தனத்திற்குத் துணைபோகின்றார்களா?