ஸ்பாட்ல இதெல்லாம் நயன்தாராவுக்குப் பிடிக்காது! – அறம்

விஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் ‘சிரிச்சா போச்சு’ நிகழ்ச்சியின் மூலம் கலைத்துறைக்கு அறிமுகமானவர் பழனிபட்டாளம். ‘அறம்’ படத்தின் மூலம் வெள்ளித்திரையிலும் என்ட்ரி கொடுக்கத் தொடங்கியுள்ளார். படத்தில் கொஞ்சநேரம் வந்தாலும் பலரின் கைதட்டல்களை, பாராட்டுகளையும் பெற்றார். அவரிடம் ஒரு ஜாலி சாட்!

”உங்களை பத்தி சொல்லுங்க பாஸ்?”

பழனிபட்டாளம்

என் சொந்த ஊர் சென்னையில அயனம்பாக்கம்னு ஒரு கிராமம். பத்தாவது வரைக்கும்தான் படிச்சேன். படிப்பு முடிஞ்சதும் சில கம்பெனிகள்ல வேலை பார்த்தேன். எனக்கு சின்ன வயசுல இருந்தே ஓவியம், மிமிக்ரி ரெண்டுலயுமே ஆர்வம். தனியார் நிறுவனத்துல கொஞ்ச நாள் ஓவியம் சம்பந்தமா வேலை பார்த்தேன். அப்புறம், தனியா கடை வெச்சு நடத்தலாம்னு முடிவு பண்ணேன். அந்த சமயத்துல டிஜிட்டல் பெயின்டிங் நல்ல ஃபேமஸ் ஆகிட்டு வந்தது. அது வந்ததும் ஓவியத்துக்கு மவுஸ் குறைய ஆரம்பிச்சது. எனக்கு வேற என்ன வரும்னு பார்த்தா, மிமிக்ரி மட்டும்தான். அதை எப்படி பயன்படுத்தலாம்னு ப்ளான் பண்ணி, சில ஸ்டேஜ் ஷோக்கள் பெர்ஃபார்ம் பண்ண ஆரம்பிச்சேன். அந்த டைம்லதான் ‘கலக்கபோவது யாரு’ங்கிற ஷோ பத்தி கேள்விபட்டு அதோட ஆடிஷன்ல கலந்துகிட்டேன். கொஞ்சம் கொஞ்சமா விஜய் டி.வியில நுழைஞ்சு மக்களுக்கு தெரிய ஆரம்பிச்சேன். 18 வருஷம் சின்னத்திரையிலே பயணிச்சேன். அங்க இருக்கும்போது நிறைய படங்கள்ல நடிக்குற வாய்ப்பு வந்தது. நல்ல கதையும், கதாபாத்திரமும் இருக்குற படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து பண்ணலாம்னு கொஞ்சம் வாய்ப்புகளை தட்டி கழிச்சேன். இப்படித்தான் நான் சின்னத் திரையில பயணிச்சேன்.

”அறம் பட வாய்ப்பு எப்படி கிடைச்சது?”

”படத்தோட துணை இயக்குநர் ஜெய் என்னைப் பத்தி கோபி சார்கிட்ட சொல்லியிருக்கார். இயக்குநர் கோபி நயினார் சார் என்னுடைய நிகழ்ச்சிகள்லாம் பார்த்துட்டு ‘நீ நடிக்கிறியா, கண்டிப்பா இது பண்ணதுக்கு அப்புறம் உனக்கு ஒரு நல்ல எதிர்காலம் இருக்கும்’னு கேட்டார். எந்த மாதிரி ரோல்னு கேட்டதுக்கு, ‘கொஞ்சம் சீரியஸா இருக்கும், உனக்கு கண்டிப்பா செட் ஆகும், நீ அதை நல்லாவும் பண்ணுவ நம்பிக்கை இருக்கு’னு சொன்னார். ‘நான் காமெடி மட்டும்தானே பண்ணுவேன்’னு கொஞ்சம் தயங்குனேன். ‘நாகேஷ் சார் அவர் நடிச்ச முதல் படம் கூட சீரியஸ் ரோல்தான், அப்புறம்தான் காமெடி படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சார்’னு சொன்னது எனக்கு ரொம்ப பிடிச்சது, ‘நீங்க என்ன சொன்னாலும் பண்றேண்ணே’னு ஒப்புக்கொண்டேன். இப்படித்தான் எனக்கு இந்தப் பட வாய்ப்பு கிடைச்சது.”

”ஷூட்டிங் ஸ்பாட்ல என்ன மாதிரியான கலட்டாவெல்லாம் நடக்கும்?”

இயக்குநர் கோபி நயினாருடன் பழினிபட்டாளம்

”எங்க செட் பசங்க, ஷாட் இல்லாத நேரத்துல உட்கார்ந்து அரட்டை அடிச்சிட்டு இருப்போம். திடீர் திடீர்னு ஒரு சவுண்டு வரும், ‘டைரக்டர் சார் உங்களையெல்லாம் கூப்டுறாங்க சீக்கிரம் வாங்க’னு சொல்லுவாங்க, அங்க போய் ‘ரெடி சார்’னு சொன்னா ‘உங்களை யார்யா இப்ப வர சொன்னது’னு சொல்லிருவார். இது மாதிரி அடிக்கடி நடக்கும். இதுல என்ன கொடுமைன்னா நாங்க இருக்குற இடத்துல இருந்து ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அரை கி.மீ நடக்கணும். இல்லன்னு தெரிஞ்சதும் மறுபடி அரை கி.மீ திரும்ப வரணும், இப்படி நடந்தே நான் ரெண்டு கிலோ குறைஞ்சுட்டேன். பொதுவா, டி.வில ஷோ பண்ற எல்லாருக்குமே, ஒருத்தர் டயலாக் மறந்துட்டா ஒருத்தவங்க எடுத்துக் கொடுப்பாங்க. ‘இந்த இடத்துல நீ இது மாதிரி சொல்லணும்டா’னு டேக் போயிட்டு இருக்கும்போதே லீட் எடுத்துக்கொடுப்போம். இது மாதிரிதான் ‘சிரிச்சா போச்சு’ல பண்ணுவோம். அதே மாதிரிதான் படத்துலேயும் நடந்தது. ‘ஏய் ஏகாம்பரம் குடிச்சிட்டு கலாட்டா பண்றியா, மரியாதையா போயிடு’னு ஸ்டில்ஸ் பாண்டி அண்ணன் என்னைப் பார்த்து சொல்லணும், அவர் மறந்துட்டு, ‘இங்க பாரு பழனி…’னு சொல்லிட்டார். நானும் நைஸா ‘அண்ணே பழனி இல்ல ஏகாம்பரம்’னு நடிச்சிகிட்டே சொன்னேன். அப்புறம் கரெக்ட் பண்ணி சொல்லுவார். ஒரு ஷாட்ல குழந்தையைக் காப்பாற்ற முடியாதுனு தெரிஞ்சதும் வெளியில நிக்குற நாங்க ஒப்பாரி வைக்கணும். ஒப்பாரி வெச்சு அழுதுகிட்டே, ‘அண்ணே பின்னாடி ரெண்டு பேர் அமுக்குறாங்க, என்னனு பாருங்க அண்ணே…’னு சொன்னேன், அங்க இருக்கவங்கள்லாம் சிரிச்சுருவாங்க. இது மாதிரி நிறைய கலாட்டா  நடந்துச்சு”

”நயன்தாராவுடன் நடித்த அனுபவம்..?”

நயன்தாராவுடன் பழனிபட்டாளம்

நயன்தாரா மேமை பத்தி நான் சொல்லித்தான் தெரியணும்னு இல்ல, தமிழ்நாட்டுக்கே தெரியும், ‘லேடி சூப்பர் ஸ்டார்’னு. கூட சேர்ந்து வொர்க் பண்றோம்னு நினைக்கும்போதெல்லாம் கிள்ளிப் பாத்துக்குவேன். ஷூட்டிங்ல நடிக்குறது மட்டுமில்லாம நிறைய வொர்க் பண்ணுவாங்க. அவங்களுக்கு வெயிட் பண்றதும் பிடிக்காது. டக்கு டக்குனு ஷாட் போயிடணும், ‘நான் நிக்குற இடம் கரெக்டா, லைட்டிங் கரெக்டா வருதா’ இது மாதிரியான விஷயங்களை கேட்டுகிட்டே இருப்பாங்க.  துணை இயக்குநர் மாதிரிதான் இருப்பாங்க. இதையெல்லாம் பார்க்கும் போது எனக்கு ரொம்ப வியப்பா இருந்தது. ஒரு நடிகர்ன்னா அதுக்கான வேலையை மட்டும் பார்க்க கூடாதுன்னு அன்னைக்குதான் புரிஞ்சது. படம் முடிஞ்சதுக்கு அப்புறம் ‘ரொம்ப சூப்பரா பண்ணியிருக்கீங்க, வெளியில ரெஸ்பான்ஸ் எப்படி இருந்தது?’னு கேட்டாங்க. ‘இந்த ரோல் பண்ணது எனக்கு ரொம்ப நிறைவா இருக்கு, வெளியிலயும் நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கு மேம்’னு சொன்னேன். ‘உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு தொடர்ந்து இதே மாதிரி நடிங்க ஆல் தி பெஸ்ட்’னு சொன்னாங்க.  ரொம்ப பெருமையா இருந்தது.”

”ஒரே லொக்கேஷன்ல ஷூட்டிங் நடந்தது, என்னென்ன சவால்கள் இருந்தது?”

”பகல், இரவு ரெண்டு நேரங்கள்லயும் ஷூட்டிங் இருக்கும். ராத்திரி கூட ஒண்ணும் தெரியாது. பகல் டைம்ல அங்க இருக்குற ஒரே பிரச்னை வெயில் மட்டும்தான். ‘எப்போடா நிழல் வரும்’னு வேண்டிகிட்டு இருப்போம். அடிக்குற வெயில்ல நான் ஒருமுறை மயங்கி விழுந்துட்டேன். கும்பலா ஓடி வரணும், போலீஸ் அப்போ தடியடி நடத்தும். திரும்ப ஓடணும். இந்த சீனுக்காக நிறைய நேரம் அங்கேயும் இங்கேயும் ஓடிகிட்டே இருந்தேன். நான் கரெக்டா வந்தாலும் பின்னால வந்தவங்க டைமிங்ல சொதப்புனாங்க. எனக்கு ஒரு கட்டத்துக்கு மேல மயக்கம் வர்ற மாதிரி இருந்தது. ஃபைனலா ஒரு ஷாட் நல்லா வர்ற மாதிரி இருந்ததும், எல்லாத்தையும் கன்ட்ரோல் பண்ணிட்டு தம் கட்டி ஓடி பீட்டர் ஹெயின் மாஸ்டர், டைரக்டர் எல்லாரும் உட்காந்துருக்க இடத்துலேயே போய் மயங்கி விழுந்துட்டேன். அங்க சீனுக்காக வெச்சுருந்த ஆம்புலன்ஸுலேயே என்னைப் படுக்க வெச்சுட்டாங்க. கிட்டத்தட்ட அரை மணி நேரமா அங்கதான் இருந்தேன். கோபி அண்ணா பக்கத்துல இருந்து எனக்கு விசிறி விட்டுட்டே இருந்தார். பொதுவா லீடிங் ரோல்ல இருக்க ஆட்கள்தான் படத்துல கஷ்டப்படுவாங்க. ஆனா இந்தப் படத்துல துணை நடிகர்கள் உட்பட எல்லாருமே கஷ்டப்பட்டாங்க.”