மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்த பிரான்ஸ் நபர்..பிரவுசிங் செண்டரில் காதல்: பூஞ்சேரியில் சுவாரஸ்யம்

தமிழகத்திற்கு சுற்றுலா வந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் தமிழ் பெண்ணை காதலித்து திருமணம் செய்திருப்பது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் நிக்கோலஸ். கார் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வரும் இவர், ஒரு மாதத்திற்கு முன்னர் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்துள்ளார்.

அப்போது ஒத்தவாடை பகுதியில் தங்கிய இவர், அங்கிருக்கும் கம்ப்யூட்டர் செண்டர் ஒன்றிற்கு பிரவுசிங் செய்ய சென்று வந்த நிலையில், அங்கு வேலை பார்க்கும் சத்யா என்ற பெண்ணை பிடித்துவிட்டதால் உடனடியாக தனது காதலை அவரிடம் தெரிவித்துள்ளார்.

பூஞ்சேரியை சேர்ந்த சத்யா தனது பெற்றோரிடம் கேட்டு தெரிவிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து சத்யாவின் பெற்றோரும் சம்மதம் தெரிவிக்க, நிக்கோலஸின் பெற்றோரும் சம்மதம் தெரிவிக்க, இவர்கள் இருவரின் திருமணமும் பூஞ்சேரியில் அமர்க்களமாக நடைபெற்றது.

இது குறித்து நிக்கோலஸ் கூறுகையில், தமிழ் கலாச்சாரம் எனக்கு பிடித்திருக்கிறது. சத்யாவின் குணம் என்னை கவர்ந்தது.

இதனால்தான் சத்யாவை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தேன். இன்னும் மூன்று மாதத்தில் சத்யாவோடு பிரான்ஸ் செல்ல இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.