தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தான் பதிவிட்டிருந்த போலியோ ஒழித்தது பிரதமர் மோடி என்ற விளம்பர பதிவை இரவோடு இரவாக நீக்கியுள்ளார்.
இந்தியாவில் போலியோவை ஒழிப்பதற்காக கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் அன்புமணி ராமதாஸ் பல்வேறு முயற்சிகளை எடுத்தார்.
அதனால், போலியோவை ஒழிக்க பாடுபட்ட அன்புமணி ராமதாஸ்க்கு உலக சுகாதார நிறுவனத் தலைவர் கடிதம் எழுதியிருந்தார். மேலும், ரோட்டரி பண்ணாட்டு அமைப்பு போலியோ ஒழிப்பு சாதனையாளர் விருதை வழங்கியது.
அதனைத் தொடர்ந்து, போலியோ இல்லாத நாடாக உலக சுகாதார நிறுவனம் கடந்த 27.03.2014 அன்று அறிவித்து அதற்கான சான்றை அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்திடம் வழங்கியது.
அதே நேரத்தில் 29.03.2014-ம் நாள் அப்போதைய ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி டாக்டர் அன்புமணி ராமதாஸ்க்கு போலியோ ஒழிப்புக்காக பாடுபட்டதை கவுரவித்து விருது வழங்கினார்.
ஆனால், அதன் பிறகு 26.05.2014-ல் பிரதமரான நரேந்திர மோடி தான் காரணம் என்று தமிழக பாஜக விளம்பரம் செய்திருந்தது.
தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், ‘போலியோ இல்லாத இந்தியா தூய்மை இந்தியா கணவு நாயகனுக்கு நன்றி’ என்று பதிவிட்டிருந்தார்.
அதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தது. பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே போலியோ இல்லாத நாடாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள போது எப்படி வாய் கூசாமல் பொய்யை கூறலாம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உண்மை அம்பலமானதால் டிவிட்டரில் இருந்த அந்த பதிவை டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பதறியடித்து நீக்கியுள்ளார். அதற்கு பதில், ‘2.95 கோடி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கியது மோடி அரசு’ என்று புதிய பதிவை பதிவிட்டுள்ளார்.