அண்ணன் பிரபாகரன் பற்றியே விசாரித்தார்கள் – தமிழ்ச்செல்வனின் மனைவி

விடுதலைப் புலிகளின் தலைவர் அண்ணன் பிரபாகரன் குறித்து ஜோசப் முகாமில் வைத்து தன்னிடம் மீண்டும் மீண்டும் விசாரணை செய்ததாக அந்த அமைப்பின் அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த சு.ப.தமிழ்ச்செல்வனின் மனைவி சசிரேகா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 36வது கூட்டத்தொடர் கடந்த 11ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உள்ளக அரங்கில் இன்று இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்து அவர், “இலங்கையில் அதிகளவில் சித்திரவதைகள் இடம்பெறும் ஜோசப் முகாமிற்கு தனது பிள்ளைகள் உள்ளிட்ட என்னையும் சேர்த்து இராணுவத்தினர் அழைத்துச் சென்றனர்.

அந்த முகாமை நெருங்கிய உடன் எங்களுடைய கண்கள் கட்டப்பட்டுவிட்டன. கண்கள் கட்டப்பட்ட நிலையிலேயே நாங்கள் ஜோசப் முகாமுக்கு அழைத்து செல்லப்படுட்டோம்.

முகாமில் எங்களை தனி அறையில் நிறுத்தினார்கள். அதன் பின்னர் எங்களை வந்து சந்தித்த புலானாய்வு பிரிவின் உயர் அதிகாரி “எந்த நேரத்திலும் உங்களிடம் விசாரணை செய்யப்படலாம்” என கூறினார்.

நான் சாதாரணம் ஒரு குற்றவாளியாக அவர்களின் முன்னிலையில் கதைக்கவில்லை. அவர்களின் முன்னிலையில் நேராக தலையை உயர்த்தியே கதைத்தேன்.

இதன் போது விடுதலைப் புலிகளின் தலைவர் அண்ணன் பிரபாகரன் தொடர்பில் மீண்டும் மீண்டும் விசாரணை செய்தார்கள். எனக்கு தெரிந்த பதிலை கூறினேன். தெரியாததை தெரியாது என்றே கூறினேன்

பின்னர் விசாரணை முடிந்ததாக கூறி என்னை பேருந்து ஒன்றில் ஏற்றி வந்து, வவுனியாவில் பொது மக்களோடு சேர்த்து விட்டார்கள்.

அங்கு வைத்து எங்களை பதிவு செய்யும் போது நாங்கள் யார் என்பதை அறிந்துகொண்டதும் 500க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் எங்களை சூழ்ந்துகொண்டனர்.

அங்கிருந்து மீண்டும் இராமநாதபுரம் முகாமுக்கு அனுப்பி வைத்தார்கள். அந்த முகாமில் வைத்து படையினரால் உயிர் அச்சுறுத்தலை நாங்கள் எதிர்நோக்கியிருந்தோம்.

நான் இராமநாதபுரம் முகாமில் தங்கியிருந்து போது தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டுச் சென்ற கருணா என்னை வந்து சந்தித்தார்.

அதன் பின்னர் அவரை இதுவரையிலும் சந்திக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.