தமது பாடசாலைக் கல்வியை நிறைவு செய்வதையிட்டு மதுபான விருந்து ஏற்பாடு செய்த இவ்வருடம் உயர் தரப்பரீட்சை எழுதும் ஆறு மாணவர்கள் நேற்று முன்தினம் மாலைப் பொழுதை சிலாபம் பொலிஸ் நிலையத்தில் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
பாடசாலைச் சீருடையில் இருந்த பாடசாலை மாணவர்கள் சிலர் மது போதையில் கூடாத பேச்சுக்களைப் பேசியவாறு முறையற்ற வகையில் நடந்து கொண்டு அயலவர்களுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் நிற்பதாக பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு சிலாபம் வட்டக்களி பிரதேச மக்கள் வழங்கிய தகவலையடுத்து சிலாபம் பொலிஸார் அப்பிரதேசத்திற்குச் சென்றுள்ளனர்.
இதன் போது ஒரு வீட்டில் நின்ற இம்மாணவர்கள் அதிக போதையில் அயலவர்களுக்கு தொல்லை ஏற்படும் வகையில் நடந்து கொண்டிருந்ததை அவதானித்து அம்மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். சிலாபம் நகரின் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் இம்மாணவர்கள் இம்முறை உயர்தரப் பரீட்சை எழுதுவதற்கு தயாராக இருந்துள்ளதோடு தமது பாடசாலைக் கல்வி நிறைவடைவதையிட்டு மாணவர் ஒருவரின் வீட்டில் விருந்து வைபவம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாகவும்,
அந்த விருந்துபசாரத்தில் கொண்டு வரப்பட்ட மதுபானத்தை அருந்தியதால் அம்மாணவர்கள் அதிக போதைக்கு உள்ளாகி தாம் யார் என்பதை மறந்து முறையற்ற வகையில் நடந்து கொண்டதால் பிரதேசவாசிகள் இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து அம்மாணவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட மாணவர்கள் ஆறு பேரும் சிலாபம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவர்களது பெற்றோர் வரவழைக்கப்பட்டு பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் கடும் எச்சரிக்கை விடுத்து மாணவர்களை பெற்றோரிடம் ஒப்படைத்ததாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.