வீதி விபத்தில் மாணவி பலி : மன்னாரில் சம்பவம்

acc

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி கரிசல் சந்தியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம் பெற்ற வீதி விபத்தில் புதுக்குடியிருப்பு பாடசாலையில் தரம் 5 இல் கல்விகற்கும் பாடசாலை மாணவி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தலைமன்னாரில் இருந்து கரிசல் வீதியூடாக மன்னார் நோக்கி  வேகமாக வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனத்தில் மோதியே குறித்த மாணவி உடல் சிதறி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த மாணவி பெரிய கரிசல் கிராமத்தைச் சேர்ந்தவர் எனவும் புதுக்குடியிருப்பில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 5 இல் கல்வி கற்கும் ஜிப்ரி பாத்திமா றிஸ்னா (வயது-10) என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த மாணவி பாடசாலை முடிந்து பேரூந்தில் ஏறி பெரிய கரிசல் கிராமத்தில் உள்ள தனது உறவினர் ஒருவரின் வீடு நோக்கிச் சென்ற வேளையில்  பேரூந்தில் இருந்து இறங்கி வீடு நோக்கி சக மாணவனுடன் நடந்து சென்று கொண்டிருந்த போது மாலை 3 மணியளவில் தலைமன்னார் வீதியூடாக மன்னார் நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனம் குறித்த சிறுமி மீது மோதியுள்ள நிலையில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்தில் மக்கள் ஒன்று கூடிய நிலையில் அவ்விடத்தில் பதற்ற நிலை ஏற்பட்டதோடு, டிப்பர் வாகனத்தின் சாரதியையும், உதவியாளரையும் மக்கள் கடுமையாக தாக்கிய நிலையில் குறித்த இருவரையும் மீட்ட பொலிஸார் மன்னார் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற மன்னார் மற்றும் பேசாலை பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற மன்னார் நீதிவான் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் சடலத்தை பார்வையிட்டு மரண விசாரணைகளை மேற்கொண்டனர்.

பின்னர் சடலத்தை மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு நீதிவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.  மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.