இலங்கையில் எவ்வித விசாரணைகளுமின்றி பலர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையானது, இலங்கை மீது சர்வதேசம் கொண்டிருந்த மதிப்பை மழுங்கடிக்கச் செய்துள்ளதாக ஐ.நா. குற்றம் சாட்டியுள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பான ஐ.நா. சபையின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் அல்லது பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதேவேளை, பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டவர்கள் தொடர்பிலான புள்ளிவிபரங்களையும் அவர் வெளியிட்டார்.
குறித்த புள்ளிவிபரங்களுக்கு அமைய விசாரணைகளை எதிர்நோக்கும் கைதிகளாக 81 பேர் உள்ளதாகவும், மேலும் 70 பேர் கடந்த 5 வருடங்களாக எந்தவிதமான வழக்கு விசாரணைகளுமின்றி தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், நீதிவிசாரணைகளற்ற வகையில், 10 வருடங்களுக்கு மேலாக 12 பேர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.