இலங்கை ஆயுதப் படையினரிடமிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தப்பிக்கச் செய்வதற்கு உதவியதாக எம்மீதான குற்றச்சாட்டுகள் வெறும் கட்டுக்கதை என இலங்கைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் ரொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.
வொஷிங்டனில் இலங்கையர்களை அடிப்படையாகக் கொண்ட அரசியல் சாரா குழுவொன்றுடனான கலந்துரையாடலின்போது இவ்வாறு தெரிவித்ததாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, விடுதலை புலிகளின் கப்பல்களை தாக்கி மூழ்கடிப்பதற்கு அமெரிக்கா உதவிபுரிந்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், எனினும், கப்பல்கள் உள்ள இடம் குறித்து இலங்கை கடற்படைக்கு தகவல் வழங்குவதற்கு அமெரிக்க உளவுத்துறை ஒப்புக்கொண்டிருந்தது என்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை, தான் தூதுவராக இருந்த 2006ஆம் ஆண்டு முதல் 2009 வரையான காலப்பகுதியில் நாம் செய்த சில விடயங்கள் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டு வருகின்றன. காலத்திற்கு காலம் வெளியாகி வரும் பிழையான தகவல்கள் பற்றி தெளிவுபடுத்தப்பட வேண்டியது அவசியமானது எனவும் தெரிவித்துள்ளார்.