ரயில் தடம் புரண்டதில் மூவர் படுகாயம்

கொழும்பிலிருந்து பதுளைக்கு பயணித்த இரவு தபால் சேவை ரயில் தடம் புரண்டதில் மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொட்டகலை ரயில் நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை குறித்த ரயில் தடம் புரண்டுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு, நான்கு ரயில் பெட்டிகள் சேதமடைந்துள்ளதோடு, ஒரு கிலோ மீற்றருக்கும் அதிகமான தூரம் வரை தண்டவாளங்களும் சேதத்திற்குள்ளாகியுள்ளன.

இவ்விபத்து காரணமாக கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணிக்கும் புகையிரதங்கள் ஹட்டன் வரையும் பதுளையிலிருந்து பயணிக்கும் புகையிரதங்கள் கொட்டகலை வரையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு, குறித்த ரயில்களில் பயணிக்கும் பயணிகள் இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேரூந்துகளில் ஏற்றிச்செல்லப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, புகையிரத பாதைகளை சீரமைக்கும் பணிகள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.