20 ஓவர் கிரிக்கெட் போட்டி: இந்தியாவிற்கு எதிரான மேற்கிந்திய தீவுகள் அணியில் கிறிஸ் கெயில் சேர்ப்பு

மேற்கிந்திய தீவுகள் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஐந்து ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. நான்கு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இந்தியா 2 போட்டிகளில் வென்று 2-1 என முன்னிலை வகிக்கிறது. ஐந்தாவது போட்டி நாளை நடைபெற உள்ளது. அதன் பின்னர் ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாட உள்ளது.
இப்போட்டிக்கான மேற்கிந்திய தீவுகள் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் முன்னணி அதிரடி ஆட்டகாரரான கிறிஸ் கெயிலுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடைசியாக ஆப்கானிஸ்தானுடன் விளையாடிய அதே அணியில் சிம்மன்ஸுக்கு பதிலாக கெயில் சேர்க்கப்பட்டுள்ளார். இப்போட்டிக்கு கார்லோஸ் பிரத்வெய்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கெயில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக கடந்த வருடம் ஏப்ரல் மாதம் நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பை இறுதி போட்டியில் தான் கடைசியாக விளையாடினார். கடந்த ஏப்ரல் மாதத்தின் போது 20 ஓவர் போட்டிகளில் 10000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை கெயில் படைத்தார்.
அணியின் தேர்வு குறித்து மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரிய தேர்வு குழு தலைவர் கர்ட்னி பிரௌன் பேசுகையில், ”கெயிலை மீண்டும் அணிக்கு வரவேற்கிறோம். அவர் மிகச்சிறந்த ஆட்டகாரர், அவர் அணிக்கு திரும்பியது பேட்டிங்கிற்கு கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது. அவர் தனது சொந்த மண்ணில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த அணியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு சிறப்பாக இருக்கும். இளம் வீரர்கள் தங்களது திறமையை வெளிகாட்ட இப்போட்டி நல்ல வாய்ப்பாக இருக்கும்” என கூறினார்.
அணி விவரம்: கார்லோஸ் பிரத்வேயிட், சாமுவேல் பத்ரி, ரோன்போர்ட் பீட்டன், கிறிஸ் கேயில், இவின் லெவிஸ், ஜேஷன் முகமது, சுனில் நரைன், கெய்ரான் பொல்லார்ட், ரோவ்மேன் பவல், மார்லன் சாமுவேல்ஸ், ஜெரோல் டெய்லர், சத்விக் வால்டன், கெஸ்ரிக் வில்லியம்ஸ்.