சுமந்திரனது தந்தை (ஆபிரஹாம்) விடுதலைபுலிகள் மின்கம்பத்தில் கட்டி வைத்து நையப்புடைத்ததன் பின்னர் அவர்கள் குடும்பமாக வடமராச்சியை விட்டு வெளியேறியதாக வடமராச்சி மக்கள் சிலரால் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் 80ம் ஆண்டு தொடங்கங்களில், அரியாலை காசிப்பிள்ளை வாசிகசாலைக்கு பக்கத்தில, புங்கன்குளம் சந்தி புகையிரதநிலையத்திற்கு முன்பாக எத்தனை பேருக்கு உந்த நையப்புடைப்புக்களும், மரணதண்டனைகளும் வழங்கப்பட்டது என்று யாரிடமாவது எண்ணுக்கணக்கு இருக்குமோ தெரியாது. சில நேரங்களில் ஒரே நாளில் இரண்டு மூன்று பேருக்கும் பக்கத்து பக்கத்துக்கு சந்திகளில் “தீர்ப்பு” வழங்கப்பட்டிருக்கும்.
கடைசியாக எனக்குத் தெரிய அரியாலைப்பகுதியில்; ஒருவரை தபாற்கட்டை சந்தியில் கிளைமோர், வயர்கள் உடன் ஒருவரை உயிருடன் கட்டினவர்கள். காலவோட்டத்தில் அந்த நடைமுறைகள் இல்லாமல் போய்விட்டது. ஆனால் அவர்களின் பிள்ளைகள், உறவினர்களுக்கு அத்தகைய தண்டனைகள் ஏற்படுத்திய இழப்புகள் இலகுவில் மறக்கக்கூடியவை அல்ல. அவர்களின் மனத்தில் இவை எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கும் என்று எல்லோருக்கும் தெரியப்போவதில்லை.
நான் எனது தொழில் முறையால் இத்தகைய பலரை சந்தித்து இருக்கிறேன். அதைவிட பொதுவில், எனக்கு தெரிந்த (சில) சென்ஜோன்ஸ் பாடசாலை நண்பர்களிடமும் இருக்கிறது.
புலிகளைப்பற்றி, தமிழர் போராடடம் பற்றி ஆர்வமாக கதைப்பார்கள், ஆனால் அதிபர் ஆனந்தராசா பற்றி கதை வந்தால் முகம் இறுக்கமாகிவிடும். இதே போல இதே நிலைமை, மத்திய கல்லூரி மாணவர்களிடமும் உண்டு, அது எங்களின் அதிபர் ராஜதுரை பற்றி; மருத்துவ பீடத்திலும் உண்டு அது வைத்தியர் ரஜனி திரணகமவை பற்றி.
ஆனால், இனம் என்று நாங்கள் கருதும்போது தனிப்பட்ட இழப்புக்கள், விருப்பு-வெறுப்புக்களை தாண்டி செயற்பட வேண்டும். சுமந்திரனின் முடிவுகள், அவரது ஆழ்மன விரோதங்களின், பிறழ் மனநிலைகளின் வெளிப்பாடாக இருக்கும் படச்சத்தில் அவர் அந்த பொறுப்பில் இருந்து விலகவேண்டும். தனிமனிதர்களின் தவறுகள், இழப்புக்கள் ஒரு இனத்தின் இருப்புக்கு முடிவு எழுதக்கூடாது.