கிளிநொச்சியில் கைதான பெண்களுக்குப் பிணை

கிளிநொச்சி விநாயகபுரம் பகுதி வீடொன்றில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நான்கு பெண்களும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கு கிளிநொச்சி நீதிமன்றில் நேற்று விசாரணைக்கு வந்தது. பாலியல் தொழில் இடம்பெற்றதாகக் கூறப்பட்ட வீட்டில் இருந்த குற்றச்சாட்டில் கடந்தமாதம் 17 ஆம் திகதி நால்வரும் கைதாகி மறியலில் இருந்தனர்.

அவர்களைத் தலா 50 ஆயிரம் ரூபா பிணையில் செல்ல உத்தரவிட்டதுடன் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமை மன்றில் கையொப்பமிட வேண்டும் என்றும் நீதிமன்று உத்தரவிட்டது.

இது போன்ற சம்பவங்கள் இனியும் நடந்தால் பிணை மறுக்கப்பட்டு விசாரணை முடியும்வரை சிறையில் இருக்கவேண்டும் எனவும் அவர்கள் எச்சரிக்கப்பட்டுப் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

குறித்த வீட்டில் பாலியல் தொழில் இடம்பெற்று வருவதாக கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சிறப்புப் பொலிஸ் குழு குறித்த வீட்டை முற்றுகையிட்டது.

அங்கு தங்கியிருந்து விடுதியை நடத்தி வந்த பெண்ளும், யுவதிகள் மூவருமாக நால்வர் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்களில் இரு யுவதிகள் கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள். ஒருவர் வவுனியாவைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.