கொழுப்பு அளவை குறைக்காவிட்டால் வீரர்கள் வெளியேற்றம்: இலங்கை விளையாட்டு மந்திரி

இலங்கை விளையாட்டுத்துறை மந்திரி தயாசிறி ஜெயசேகரா நேற்று அளித்த பேட்டியில், ‘இலங்கை அணியில் யாரும் சர்வதேச தரத்துக்கு ஏற்ற திருப்திகரமான உடல் தகுதியுடன் இல்லை. இருப்பினும் இந்த முறை மட்டும் அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

தேசிய அணியை தனிப்பட்ட குழுவினர் தேர்வு செய்தாலும் நாட்டுக்காக விளையாடும் அந்த அணிக்கு இறுதி ஒப்புதல் அளிக்க வேண்டியது விளையாட்டு மந்திரி தான். கிரிக்கெட் வீரர்களின் உடலில் கொழுப்பின் அளவு 16 சதவீதம்தான் இருக்க வேண்டும். ஆனால் இலங்கை அணி வீரர்களில் பலருக்கு கொழுப்பின் அளவு 26 சதவீதத்துக்கு அதிகமாக உள்ளது. 3 மாதங்களுக்குள் இலங்கை அணி வீரர்கள் தங்கள் உடல் தகுதியை மேம்படுத்த வேண்டும். உடலில் கொழுப்பு 16 சதவீதத்துக்கு அதிகமாக இருக்கும் வீரர்கள் இலங்கை அணியில் விளையாட அனுமதிக்கப்படமாட்டார்கள்’ என்று எச்சரிக்கை விடுத்தார். சர்ச்சைக்குரிய வேகப்பந்து வீச்சாளர் 33 வயதான மலிங்கா 80 கிலோ உடல் எடை கொண்டவர் என்றும், அவர் ஒரு முறை உடல்தகுதி சோதனையில் தோல்வியை சந்தித்தார் என்றும் கூறப்படுகிறது.