ரசிகர்களை மீண்டும் ஒக்டோபரில் சந்திப்பேன்: ரஜினி

தான் அரசியலில் ஈடுபடுவது குறித்தும், அரசியல்வாதிகள் சிலர் தன்னைச் சந்தித்து வருவது குறித்தும் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் உரையாடினார்.

இன்று வியாழக்கிழமை சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்கள் ரஜினிகாந்திடம் அவர் அரசியலில் ஈடுபடுவது குறித்து என்று கேள்வி எழுப்ப அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த் ”அரசியலுக்கு வருவது பற்றி முடிவு எடுக்கும்போது நான் தெரிவிப்பேன். அரசியலுக்கு வரும் போது நிச்சயம் உங்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பேன்” என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டார்.

மேலும் தனது ரசிகர்களை சந்திப்பது பற்றி குறிப்பிட்ட ரஜினிகாந்த் ”செப்டம்பர் இறுதி அல்லது ஒக்டோபர் மாதத்தில் மீண்டும் ரசிகர்களை சந்திப்பேன்” என்று தெரிவித்தார்.
அரசியல் தலைவர்களுடன் சந்திப்பு குறித்து பேசிய ரஜினிகாந்த் ”அரசியல் தலைவர்களை சந்திக்கும்போது அரசியல் பேசத்தான் செய்கிறேன். ” என்று ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் மேலும் தெரிவித்தார்.

முன்னதாக கடந்த மே மாதத்தில் தனது ரசிகர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த்  கூறிய கருத்துகள் அவருக்கு அரசியல் ஆர்வம் இருக்கிறதோ என்ற நீண்ட நாள் சந்தேகத்தை மீண்டும் உயிர்ப்பித்தது.

அப்போது ஆன்மிகத்தை முழுமையாக நம்பும் தான் ஆண்டவன் தீர்மானித்தபடியே செயல்படுவதாகவும் ஒருவேளை நாளை அரசியலில் ஈடுபட ஆண்டவன் தீர்மானித்தால் அது நடைபெறும் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.