காணாமல் ஆக்கப்பட்டோரின் அறிக்கைத் தயார் : 1,46000 பேர்களைக் கொன்ற இலங்கைப்படை!

சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழு ஈழத் தமிழர்களுக்கான பல்வேறு உதவித்திட்டங்களை செயற்படுத்த வேண்டும் என எட்வர்ட் ஆனந்தராஜா டொமினிக் பிரேம்நாத் வலியுறுத்தியுள்ளார்.

ஜெனீவாவில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கூட்டத்தொடரில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் அங்கு கருத்துகளை முன்வைக்கையில்,

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவானது ஈழத்தமிழர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவென அடிப்படை வசதிகளையும், அவர்களது உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் அவர்கள் சந்தோஷமாக வாழ்வதற்கான வழிமுறைகள் போன்றவற்றை ஏற்படுத்தித்தர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

தனிஈழம் வேண்டி முன்னெடுக்கப்பட்ட 30 வருட கால யுத்தமானது 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை அரசால் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரையான ஆறு மாதக் காலப்பகுதிக்குள் 1,46000 பேர் வடகிழக்கில் இலங்கைப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர்.

இது வரையில் இலங்கை அரசால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த அறிக்கையை நாங்கள் தயார் செய்து வைத்துள்ளோம்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் இலங்கையில் இடம்பெற்ற மனித படுகொலை குறித்து சர்வதேச நீதிமன்றம் முன்னெடுக்கும் விசாரணைகளில் இலங்கை அரசாங்கம் பங்கு கொள்ள முடியாது.

மேலும் ,யுத்தத்திற்கான பிரதான காரணம் குறித்து முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் மறுதலித்துள்ளது.

இதேவேளை, தமிழ் மக்களுக்கான அடிப்படை உரிமைகளை வழங்க இலங்கை அரசாங்கம் முன்வருவதற்கு மனித உரிமை ஆணைக்குழு வழிசமைத்துத் தர வேண்டும் எனவும் அவர் ஐ. நாவிற்கு எடுத்துரைத்தார்.

இந்த கூட்டத்தொடரில் இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.