வடமாகாண அவைத்தலைவர் பக்கச் சார்பாகச் செயற்பட்டுள்ள விடயம் தொடர்பாக மாவை சேனாதிராஜாவுக்கு தெரியாமலிருந்தால் அதனை நினைத்து நாங்கள் வருத்தப்பட வேண்டியிருக்கிறது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் இனியாவது இது தொடர்பில் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அடுத்த அவைத்தலைவர் தொடர்பில் பிரச்சினை எழுந்துள்ளதே! என ஊடகவியலாளரொருவர் மாவை சேனாதிராஜாவை நோக்கிக் கேள்வியெழுப்பிய போது தமிழரசுக் கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அதனைப் பற்றி நாங்கள் ஆராய விரும்பவில்லை எனப் பதிலளித்திருந்தார்.
இது தொடர்பில் வினாவிய போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் வடமாகாண அவைத்தலைவர் பக்கச் சார்பாகச் செயற்படக் கூடாது என்பது தான் உண்மை. சீ.வி. கே. சிவஞானத்தை முன்னிலைப்படுத்தி வடமாகாண முதலமைச்சருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட்டிருப்பது மிக மோசமானதொரு முன்னுதாரணம்.
அவ்வாறு வடமாகாண அவைத்தலைவர் செயற்படுவது ஏற்கத்தக்கதொன்றல்ல ஆகவே அவர் நிச்சயமாகத் தனது பதவியை இராஜினாமா செய்வது தான் சரியானது எனவும் சுட்டிக்காட்டினார்.