குரு பகவான் அள்ளித் தரும் யோகங்கள்

கஜகேசரி யோகம்: குரு, சந்திரனுக்கு கேந்திரத்தில் அதாவது 4,7,10 ஆகிய இடங்களில் இருந்தால் கஜகேசரி யோகம் உண்டாகிறது. இந்த யோகத்தைப் பெற்றவர்கள் செல்வம், செல்வாக்கு, வீடு, வாகனம், உயர்ந்த பதவி போன்றவற்றைப் பெற்றவர்களாக விளங்குவர்.

குரு சந்திர யோகம்: சந்திரனுக்கு குரு 1,5,9 ஆகிய இடங்களில் காணப்பட்டால், குரு சந்திர யோகம் உண்டாகிறது. இந்த யோகத்தைப் பெற்றவர்கள் புகழ் மிக்கவர்களாகவும், நல்ல அந்தஸ்து படைத்தவர்களாகவும் இருப்பார்கள்.

குரு மங்கள யோகம்: குரு, செவ்வாய் சேர்க்கை பெற்றிருந்தாலும், குருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தாலும் இந்த குரு மங்கள யோகம் உண்டாகும். இந்த யோகத்தைப் பெற்றவர்கள் வீடு, இடம், வாகனம் போன்றவற்றை அதிகம் வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.

ஹம்ச யோகம்: சந்திரனுக்கு கேந்திரத்தில் குரு உச்சம் பெற்றிருந்தால், இந்த ஹம்ச யோகம் உண்டாகும். நல்ல உடலமைப்பையும், ஒழுக்கமான வாழ்க்கையை ஏற்றவர்களாகவும் இந்த யோகத்தில் பிறந்தவர்கள் இருப்பார்கள்.

சகட யோகம்: குருவுக்கு சந்திரன் 6,8,12 ஆகிய இடங்களில் இருந்தால், இந்த சகட யோகம் உருவாகிறது. இவர்களது வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் கலந்திருக்கும். ஒரு தொகை செலவழிந்த பிறகே, மற்றொரு தொகை வந்து சேரும்.

பொதுவாக குரு தரும் யோகம் உங்கள் சுய ஜாதகத்தில் எப்படிஉள்ளது என்பதைக் கண்டறிந்து, குருவைப் போற்றிக் கொண்டாடினால் பொன்னான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளும் வாய்ப்பு உருவாகும். குருவோடு மற்ற கிரகங்கள் சேர்ந்திருந்தால் அதன் பாதசார பலமறிந்து அதற்குரிய தல வழிபாட்டை முன்ன தாகச் செய்வது நல்லது.

ஒற்றுமை தரும் ஜோடி தீபம் :

குருவை வழிபடும் போது படைக்க வேண்டியவை, கற்கண்டு சாதம், தயிர் சாதம், கொண்டைக்கடலை, மஞ்சள் வாழை, பால், சர்க்கரை, வெற்றிலை, பாக்கு ஆகியவையாகும். வியாழக்கிழமை மஞ்சள் வண்ண மலரால் அலங்கரித்து குருபகவானுக்கு தீபம் ஏற்றினால் நெஞ்சம் மகிழும் வாழ்க்கை அமையும். தம்பதியர் ஜோடி தீபம் ஏற்றுவது நல்லது. நெய் தீபத்தை ஏற்றி குருவை பார்த்தபடி வைக்க வேண்டும். வயதுக்கு ஏற்றபடியும் விளக்குகளை ஏற்றலாம். குரு பிரசாதத்தை நாமே உபயோகிப்பது நல்லது. ஜோடி தீபம் ஏற்றும்போது, நெருக்கமாக ஏற்றினால் ஒற்றுமை பலப்படும்.

குருவை வழிபட வேண்டிய நேரம் :

எந்த நேரம் வேண்டுமானாலும் குருபகவானை வழிபாடு செய்யலாம். இருப்பினும் குருபகவான் உச்சம் பெறும் கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் பொழுதும், குருவுக்கு சொந்த வீடான தனுசு, மீனம் ஆகிய ராசிகளில் சூரியன் சஞ்சரிக்கும் மார்கழி, பங்குனி ஆகிய மாதங்களிலும், விசாகம், புனர்பூசம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வியாழக்கிழமையோடு இணைந்து வரும்பொழுதும் குரு ஓரையில் குருவை வழிபட்டு பரிகாரங்கள் செய்தால் அற்புதப் பலன்களைப் பெறலாம்.