கேப்டன் நம்பிக்கை வைத்து விட்டால், முழு சுதந்திரம் கொடுப்பார்: பும்ப்ரா சொல்கிறார்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 191 ரன்களில் சுருண்டது. இதற்கு பும்ராவின் பந்து வீச்சு முக்கிய காரணமாக இருந்தது. அவர் 8 ஓவரில் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

ஆட்ட நாயகன் விருது பெற்ற பும்ப்ரா, கேப்டன் நம்மீது நம்பிக்கை வைத்து விட்டால், முழு சுதந்திரம் கொடுப்பார் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பும்ரா கூறுகையில் ‘‘இதற்கு முன் எனக்கு மோதுமான வகையில் புதிய பந்தில் பந்து வீச வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் நான் விரக்தியடையவில்லை. எந்தவொரு இடத்திலும் பந்துவீச அழைத்தாலும் நான் மகிழ்ச்சியாக பந்து வீசி, அணிக்கு எனது பங்களிப்பை அளிக்க விரும்புவேன். புதிய பந்தில் பந்து வீசியது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

இங்கிலாந்து மண்ணில் தற்போதுதான் நான் முதன்முறையாக விளையாடுகிறேன். இங்கு வெள்ளைப் பந்து (ஒருநாள் கிரிக்கெட்டில் பயன்படுத்தும் பந்து) அதிக அளவில் ஸ்விங் ஆகவில்லை. நான் எதிர்பார்த்ததை விட ஆடுகளம் சற்று வித்தியாசமாக இருந்தது. இதனால் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவும், பந்து வீச்சாளர்களுக்கு சற்று கடினமாகவும் உள்ளது.

எல்லா நேரமும் ஒரே சீராக பந்து வீச வேண்டியது அவசியம். ஆடுகளத்தில் பந்து வீச்சு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாததால், பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான வகை ஏற்படுத்தி விட்டுவிடக்கூடாது. ஆடுகளம் மிகவும் பிளாட்டாக இருக்கிறது. இது பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் கடினம்.

கேப்டன் உங்கள் மீது அதிக அளவில் நம்பிக்கை வைத்து விட்டால், அவர் உங்களுக்கு முழு சுதந்திரம் கொடுப்பார். நீங்கள் விரும்பும் எந்த விதமான பந்துகளையும் (பவுன்சர், யார்க்கர்) வீசலாம்’’  என்றார்.