வடமாகாண பிரதம செயலாளருக்கு பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அனுப்பிய பதில் கடிதத்தின் உள்ளடக்கம்

மேற்படி விடயம் தொடர்பாக தங்களால் அனுப்பப்பட்ட 07/06/2017 ம் திகதிய NP/01/02/07/A இலக்க கடிதம் கிடைக்கப்பெற்றது, நன்றி. ( பிரதி இணைக்கப்பட்டுள்ளது )
கடிதத்தில் மூன்றாம் பந்தியில் குறிப்பிடப்பட்ட சுற்று நிருபங்களுக்கு அமைய திரு யோ. இரவீந்திரன் அவர்களின் இடமாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. தாங்கள் குறிப்பிட்ட பொது நிர்வாக சுற்றறிக்கை 56/89 க்கு புறம்பான முறையில் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு இடமாற்றம் வழங்கப்பட்டிருக்கின்றது. நியமனம், பதவிஉயர்வு, இடமாற்றம், ஒழுக்காற்று கட்டுப்பாடு, சேவையில் இருந்து நிறுத்துதல் இந்த விடயங்கள் ஒரு மாகாணத்தில் மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவிற்கு தான் சுற்றறிக்கை மூலம் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய இடமாற்றம் மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினூடாகவே மேற்கொள்ளப்பட வேண்டிய விடயம். ஆனால் கௌரவ ஆளுநரிடம் ஒரு அரசியல்வாதியின் வேண்டுகோளுக்கு இணங்க கௌரவ ஆளுநர் முடிவெடுத்து மாகாண செயலாளருக்கு பரிந்துரைக்கப்பட்டு இந்த இடமாற்றம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இது 17/05/2017 ம் திகதிய NP/03/02/GA/1/18 ம் இலக்க கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் அவர்களின் கடிதம் மூலம் கௌரவ ஆளுநர் அவர்களின் பணிப்பின் பிரகாரம் வழங்கப்பட்டுள்ளது. ( பிரதி இணைக்கப்பட்டுள்ளது ) மேற்குறிக்கப்பட்ட விடயத்தை மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் ஊடாக தாங்களே மேற்கொண்டு திரு யோ. இரவீந்திரனுக்கு ஏற்பட்ட அசெளகரியத்தையும் மனஉளச்சலையும் நீக்கி சுற்றுநிருபம் 56/89 ற்கு ஏற்ப நடைமுறைப்படுத்துவீர்கள் என எதிர் பார்க்கின்றேன்.
மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய விடயத்தை கௌரவ ஆளுநர் மேற்கொண்டிருப்பதால் தாங்கள் குறிப்பிட்டது போல் கௌரவ ஆளுநருக்கு மேன்முறையீடு செய்யவோ அல்லது மாகாண கல்வி அமைச்சின் செயலாளருடன் தொடர்பு கொள்வதோ பயனற்றது என்பது எனது அபிப்பிராயம்.
வடமாகாண முதலமைச்சர் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் கௌரவ க.வி. விக்னேஸ்வரன் அவர்களின் அனுசரணையுடன் இலங்கை ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்கள் பிரதம செயலாளராக திரு அ.பத்திநாதன் ஆகிய தங்களை நியமித்துள்ளார். எனவே பக்கச்சார்பற்ற, நேர்மையான, ஊழலற்ற ஒரு முடிவிற்கு வரமுடியும் என நான் நம்புகின்றேன்.

JEEVAN CLG-page0001