குளிகன் தோஷத்தை போக்கும் சித்திரகுப்தன்

சித்திரா பவுர்ணமி, கணக்கு போடும் எமதர்மனின் கணக்காளரின் பிறந்தநாள் என்று மட்டுமே எல்லாரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அதற்கு ஒரு சிறப்பான பொருளும் உண்டு.

ஒரு மனிதனின் ஜணன ஜாதகத்தில், அதாவது ஆயுள் காரகன் என்று சொல்லக்கூடிய சனி பகவானின் பிள்ளைகளான மாந்தி, குளிகன் ஆகிய இருவரில் குளிகன் என்ற உபகிரகமே ஒரு மனிதனின் ஆயுள் காலகட்டத்தை நிர்ணயம் செய்கிறார்.

இந்த குளிகனை வைத்து அஷ்டவர்க்கம் என்று கணக்குப் போட்டு ஜோதிட உலகம் ஆயுள் காலத்தை துள்ளியமாக சொல்லி விடுகிறது. இந்த குளிகன் தோஷத்தை முற்றிலுமாக விளக்கிவிட கூடியவர் சித்திரகுப்தன். சித்திரகுப்தனை சித்திரா பவுர்ணமி அன்று மட்டும் வழிபடுவதோடு விட்டுவிடாமல் சனிக்கிழமை, அமாவாசை, வெள்ளி, ஞாயிற்றுக்கிழமை, ராகு கால நேரங்களில் வணங்குவது சிறப்பு உடையது.

இதனால் கடும் நோயால் பீடிக்கப்பட்டவர்கள் கூட சுகம் அடைய முடியும். இந்த சிறப்பு செய்தியை அனைவருமே அறிய வேண்டிய ஒன்றாகும். சித்திரகுப்தனின் வழிபாட்டிற்கான ஆலயங்கள் காஞ்சீபுரத்திலும், சிதம்பரத்திலும், தேனி மாவட்டம் கோடங்கி பட்டியிலும், திருவண்ணாமலையிலும் தனிச் சன்னதியும் உள்ளது.

உலகிலுள்ள பாவ, புண்ணியங்களை குறைத்து வைக்கும் பணியை சிறப்பாக செய்து வரும் சித்திரகுப்தனுக்கு கரும பூமியான பாரத நாட்டில் 14 திருத்தலங்கள் இருப்பதாக புரணாங்கள் சொல்கின்றன. சித்திரகுப்தன் கதை மூலமாக ஒரு தனி மனிதனுக்கு புத்திமதியானது யாதெனில் தெரிந்து செய்யும் தவறுகளும், தெரியாமல் செய்யும் தவறுகளும் கூட இறைவனால் கணக்கெடுத்துக் கொள்ளப்படும் என்பதாகும்.

எனவே, உலகியல் வாழ்வில் தான, தர்மங்கள் செய்வதும், பிறருக்கு தம்மால் இயன்ற உதவிகள் செய்வதும், மற்றவர்களுக்கு நல்லவற்றை சொல்வதும் ஆகிய புண்ணிய செயல்களை செய்தால் நடக்கும் இப்பிறப்பிலும், மறுப்பிறப்பிலும் இறை அருளால் சொர்க்க வாழ்வே கிடைக்கும் என்று உணர்த்தப்பட்டுள்ளது.