வன்முறைகள் மூலம் கேரளாவில் பாரதீய ஜனதாவின் வளர்ச்சியை தடுத்து நிறுத்திவிட முடியாது என்று அமித்ஷா கூறினார்.
வருகிற 2019-ம் ஆண்டில் நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலை யொட்டி, பாரதீய ஜனதாவை பலப்படுத்தும் முயற்சியில் அக்கட்சியின் தலைவர் அமித்ஷா ஈடுபட்டு உள்ளார். இதற்காக அவர் நாடு முழுவதும் 95 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அந்த வகையில் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக அவர் நேற்று முன்தினம் கேரள மாநிலம் வந்தார்.
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் மாநில பாரதீய ஜனதா கட்சிக்கு புதிய தலைமை அலுவலக கட்டிடம் கட்டப்படுகிறது. இதற்கான அடிக் கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. புதிய கட்டிடத்துக் கான அடிக்கல்லை அமித்ஷா நாட்டினார்.
அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது:-
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு வரும் போதெல்லாம் பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மீதான தாக்குதல்களும் வன்முறைகளும் அதிகரிக்கின்றன. இதனால் பாரதீய ஜனதா கட்சியினர் தங்கள் அரசியல் பணிகளை மேற்கொள்வது மிகவும் கடினமாக உள்ளது.
இந்த முறை அந்த கூட்டணி ஆட்சிக்கு வந்த பின்னர், அரசியல் காரணங்களுக்காக பாரதீய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் 13 பேர் இதுவரை கொல்லப்பட்டு உள்ளனர். இதில், முதல்- அமைச்சர் பிரனராயி விஜயனின் சொந்த மாவட்டத்தில் (கண்ணூர்) அதிகம் பேர் கொல்லப்பட்டு இருப்பது மிகவும் வெட்கப்படக்கூடியது ஆகும்.
இதுபோன்ற வன்முறைகள் மூலம் பாரதீய ஜனதாவின் வளர்ச்சியை தடுத்து நிறுத்திவிட முடியாது
முதல்-மந்திரியும் அவரது கட்சியினரும் பாரதீய ஜனதாவை பணியவைத்து விடலாம் என்று நினைத்தால் அது நடக்காது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆட்சியில் இருக்கிறது என்ற தைரியத்தில் வன்முறையை கட்டவிழ்த்து விடுபவர்களை சும்மா விடமாட்டோம். பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கொலைக்கு காரணமானவர்களுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க நாங்கள் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை எடுப்போம்.
இவ்வாறு அமித்ஷா கூறினார்.