“சுதந்திகா ஜயசிங்க நாளை வேண்டுமானாலும் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு வந்து தனது பணிகளைச் செய்யலாம்” என்று விளையாட்டுத்துறை அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
ஒலிம்பிக் பதக்கத்தை விற்பனை செய்யப்போவதாக சுசந்திகா ஜயசிங்க விடுத்துள்ள அறிவிப்பு குறித்து வினவியபோதே அவர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“விளையாட்டு நிதியத்திலிருந்து சுசந்திகா ஜயசிங்கவுக்கு 80 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டு நிதியத்தின் பணத்திலிருந்து இப்படியான கொடுப்பனவுகளைச் செய்யமுடியாது.
எனவே, முன்னணி விளையாட்டு வீரர்களுக்கு மாதம் 75 ஆயிரம் ரூபா கொடுப்பனவுடன் வாகன வசதிகளையும் செய்துகொடுப்பதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நான் அமைச்சரவையில் சமர்ப்பித்தேன். 60 ஆயிரம் ரூபாவை வழங்கவே அமைச்சரவை அனுமதி வழங்கியது. இதனால்தான் சுசந்திகா ஜயசிங்க இப்படி சொல்கின்றார்.
பதக்கத்தை விற்பனைசெய்யவேண்டியதில்லை. அமைச்சுக்கு வந்து அவர் கடமைகளைப் பொறுப்பேற்கலாம். சம்பளமும் நிறுத்தப்படவில்லை” என்றார்.