முஸ்லிம்கள் மீதான மத, இன வெறுப்புத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை அரசும், பொலிஸாரும் உறுதிசெய்ய வேண்டும் என இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் மாங் தெரிவித்துள்ளார்.
தெவட்டகஹா பள்ளிவாசலுக்கு, இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள், ஆஸ்திரேலியா, கனடா, நெதர்லாந்து, நோர்வே, தென்னாபிரிக்கா, சுவிசர்லாந்து தூதரகப் பிரதிநிதிகள் நேற்று சென்றுள்ளனர்.
அங்கு முஸ்லிம் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது என ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தொடர்ந்தும் தெரிவிக்கப்படுவது,
முஸ்லிம் பள்ளிவாசல்கள், வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்தே இந்தப் பயணம் இடம்பெற்றிருந்தது.
இந்தத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் நீதியின் முன் விரைவாகக் கொண்டு வரப்பட வேண்டும் என கோரினர்.
மத மற்றும் இன வெறுப்பின் விளைவுகளை இலங்கையர்கள் நன்றாக அறிவார்கள். தேசிய நல்லிணக்கமும், சகிப்புத் தன்மையும் முன்னோக்கிச் செல்லும் சந்தர்ப்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
மேலும், வெறுக்கத்தக்க குற்றங்கள் எந்தத் தண்டனையிலிருந்தும் விலக்கானது அல்ல. இதனை அரசும், பொலிஸாரும் உறுதி செய்தல் அவசியம் என தூதுவர் மாங் குறிப்பிட்டுள்ளார்.