ரஜினி வந்தால் நல்லா இருக்கும்: நடிகர் நட்ராஜ் ஆசை

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது ரசிகர்களிடம் பேசிய ரஜினி, “ஆண்டவன் நினைத்தால் அரசியலுக்கு வருவேன். எதிர்ப்பு இல்லாமல் அரசியலில் யாரும் வளர முடியாது. 23 ஆண்டுகள் மட்டும் தான் கர்நாடகாவில் வாழ்ந்தேன். 44 ஆண்டுகள் தமிழ்நாட்டில் தான் வாழ்ந்து வருகிறேன். நான் ஒரு பச்சை தமிழன். அரசியல் சிஸ்டம் சரியில்லை” என்று கூறினார்.
ரஜினியின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரசிகர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். பல்வேறு தலைவர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. சினிமா துறையில் இருந்து பல பிரபலங்கள் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் நல்லா இருக்கும் என்று நம்பக் கூடியவர்களில் நானும் ஒருவன் என்று நடிகர் நட்ராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “இவரு இதுக்கு தான் லாயக்கு என்று சொல்ல முடியாது. வராரு வரவில்லை என்பது அவரது தனிப்பட்ட விஷயம், அவர் தான் முடிவு செய்ய வேண்டும். வந்தால் நல்லா இருக்கும் என்பது எங்க எல்லோருடைய நம்பிக்கை. அப்படி நம்பக் கூடியவர்களில் நானும் ஒருவன்” என்றார்.