பொதுபலசேனா உள்ளிட்ட பௌத்த அமைப்புக்கள் வலியுறுத்தல்
நாட்டின் புராதன சொத்துக்களையும் பெளத்த சிங்கள உரிமையையும் பாதுகாக்க வேண்டும். அதற்காகவே நாம் குரல்கொடுக்கின்றோம். அரசாங்கத்தை வீழ்த்த வேண் டும் அல்லது புதிய அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்பது எமது நோக்கம் அல்ல.
நாட்டின் பெளத்த சிங்கள உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். எமது புராதன சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்காக ஒரு அடி பின்வாங்கவும் நாம் தயாராக உள்ளோம்.
இன்னும் சில காலம் அமைதி காக்கவும் தயாராக உள்ளோம் என பொதுபல சேனா உள்ளிட்ட சிங்கள பெளத்த அமைப்புகள் தெரிவித்தன.
பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணாவிட்டால் அடுத்த சமுதாயம் இந்த தீர்வை அடக்குமுறை மூலமே பெற்றுக்கொள்ளும். ஆகவே பொறுமைகாப்பது அச்சுறுத்தலானது எனவும் அந்த அமைப்புக்கள் குறிப்பிட்டன.
பொதுபல சேனா அமைப்பின் செய்தியாளர் சந்திப்பு நேற்று ராஜகிரிய விகாரையில் இடம்பெற்றது. இதில் பொதுபல சேனா அமைப்புடன் இணைந்து செயற்படும் சிங்கள ராவய, சிங்கள அபி ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள்ட இணைந்து இந்த கருத்துக்களை முன்வைத்தனர்.
சிங்கள ராவய அமைப்பின் பொதுச்செயலாளர் மாகல்கந்தே சுதத்த தேரர் கருத்து தெரிவிக்கையில், இந்த நாட்டில் சகல பகுதிகளிலும் சகலரும் வாழக்கூடிய உரிமை உள்ளது.
அதேபோல் நாட்டில் உள்ள தொல்பொருட்கள் அனைத்தையும் பாதுகாக்க வேண்டியது நாட்டில் வாழும் சகல மக்களின் கடமையாகும். ஆனால் இன்று கிழக்கில் இடம்பெறும் சம்பவங்கள் மிகவும் மோசமானதாக உள்ளன.
பொலிஸ், காணி அதிகாரங்கள் இல்லாமலேயே கிழக்கு மாகாணசபை மிகவும் மோசமானதாக செயற்பட்டு வருகின்றது. இது தொடர்பில் நாம் கேள்வி எழுப்பும் போது எம்மை இனவாதிகளாக சித்தரித்து நாட்டில் தவறான தோற்றத்தை வெளிபடுத்தி வருகின்றனர்.
கடந்த சில காலமாக நாட்டில் பௌத்தம் சிங்களம் புறக்கணிக்கப்பட்டு வருகின்றது. நாட்டின் புராதன தன்மைகள், தொல்பொருட்கள், தேசிய வனம், பெளத்த கொள்கை என அனைத்தும் அழிக்கப்பட்டு வருகின்றன.
எமது அடையாளம் அழிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் இவற்றை நாம் தட்டிக் கேட்டால் எம்மை பெளத்த இனவாதிகள் என விமர்சித்து அடக்க முயற்சிக்கின்றனர்.
எமது அடையாளத்தை அழித்து சிங்கள பெளத்த மக்களை அடக்குவதா இந்த அரசாங்கம் கூறும் நல்லிணக்கம்? புராதன சொத்துகளை பாதுகாப்பதன் மூலம் முஸ்லிம்களின் மனங்கள் காயமடைகின்றன என்றால் பௌத்தத்தை அழித்தால் சிங்கள மக்களின் மனங்கள் காயப்படாதா? எமது பக்க நியாயங்களை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த அரசாங்கம் கலந்துரையாடலின் மூலம் பிரச்சினைகளை தீர்க்க அழைக்கின்றது. அதற்கமைய அமைச்சர் மனோ கணேசனுடன் நாம் பேச்சுவாத்தைக்கு சென்றால் இந்த நாடு சிங்கள நாடு என்பதை அவர் ஏற்றுகொள்ள தயங்குகின்றார்.
இந்த நாடு சிங்கள நாடு என்பதை மறுத்து எவ்வாறு இந்த நாட்டில் நல்லிணக்கத்தை உருவாக்க முடியும்? ஆகவே இவர்கள் சிங்கள மக்களை புறக்கணிக்கும் நிகழ்ச்சி நிரலை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் ஞானசார தேரரை இந்த நாட்டின் மிகப்பெரிய தீவிரவாதியாக சித்தரித்து விட்டனர்.
ஒரு தீவிரவாதியை கைதுசெய்ய எவ்வாறு பாதுகாப்பு நகர்த்தப்படுமோ அதேபோல் ஞானசார தேரரை கைது செய்யவும் மிகப்பெரிய திட்டம் தீட்டியுள்ளனர்.
200க்கும் அதிகமான பொலிசார் , விசேட அதிரடிப்படையினர் என மிகப்பெரிய பாதுகாப்பு சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்தே இந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.
ஞானசார தேரரின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. அவரை கொலைசெய்ய மிகப்பெரிய திட்டம் வரையப்பட்டுள்ளது. அவரை சட்டத்தின் மூலம் கைது செய்யாது இரகசியமாக கைதுசெய்து அவரை கொலைசெய்ய மிகப்பெரிய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
அவரை கொலை செய்து அதன் மூலம் 1989ஆம் ஆண்டு கலவரம் போன்றதொரு கலவரத்தை உருவாக்கி இன முறுகலை ஏற்படுத்தவே திட்டம் தீட்டினர்.
இதன் பின்னணியில் அரசாங்கத்தின் தூண்டுதல் உள்ளது. பாதுகாப்பு படைகளின் சிலரும் இதற்கு உடந்தையாகியுள்ளனர்.
ஞானசார தேரரை கைது செய்ய எந்த காரணமும் இல்லை. பிடியாணையும் இல்லை. நீதி அமைச்சருக்கு இந்த விடயம் தெரியவில்லை. ஆகவே ஒரு சிலரின் தனிப்பட்ட தேவைக்காகவே ஞானசார தேரரை கைதுசெய்ய முயற்சிக்கின்றனர். அவரை கொலைசெய்யவே இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த செயல் அரசாங்கத்தை வீழ்த்தும் நோக்கத்தில் எதிர்க்கட்சி மேற்கொள்ளும் சூழ்ச்சியாக இருக்கலாம். அல்லது எதிரணியை பலவீனப்படுத்த அரசாங்கம் மேற்கொள்ளும் சூழ்ச்சியாக இருக்கலாம்.
அரசாங்கத்தை வீழ்த்த வேண்டும் அல்லது புதிய அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்பது எமது நோக்கம் அல்ல.
நாட்டின் பெளத்த சிங்கள உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். எமது புராதன சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்காக ஒரு அடி பின்வாங்கவும் நாம் தயாராக உள்ளோம்.
இன்னும் சில காலம் அமைதி காக்கவும் தயாராக உள்ளோம். அல்லது ஞானசார தேரரை கைது செய்தால் தான் எமது உரிமைகள் கிடைக்கும் என்றால் அவரின் கைது தான் சிங்களவர்களின் உரிமைகளை பாதுகாக்க ஒரே வழிமுறை என்றால் அதற்காக ஞானசார தேரர் கைதாகவும் தயாராக உள்ளார்.
ஆனால் ஞானசார தேரரை கைது செய்ய முன்னர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், ரவுப் ஹகீம், வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன், அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், சிவாஜிலிங்கம் எம்.பி போன்றவர்களை முதலில் கைதுசெய்ய வேண்டும்.
அதன்பின்னர் ஞானசார தேரர் தானாக சரணடைவார். நாட்டில் தமிழ் முஸ்லிம் இனவாதிகள் கருத்துக்களை முன்வைக்கும் போது வேடிக்கை பார்க்கும் அரசாங்கம் எம்மை மாத்திரம் தண்டிக்க முயற்சிக்கின்றது.
பாராளுமன்றத்தில் அனைவரும் முஸ்லிம்களின் நியாயத்தை மாத்திரம் கருத்தில்கொண்டு செயற்படுகின்றனர். ஆனால் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக முன்வைத்த கருத்துக்கள் வரவேற்கத்தக்கவை.
அவர் கூறுவதையே நாமும் கூறுகின்றோம். இப்போது பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணாவிட்டால் அடுத்த சமுதாயம் இந்த தீர்வை அடக்குமுறை மூலமே பெற்றுக்கொள்ளும். ஆகவே பொறுமைகாப்பது அச்சுறுத்தலானது என்றார்.