ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை மாதம் 25-ந்தேதி முடிகிறது. புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
ஜனாதிபதி தேர்தலில், பொது வேட்பாளரை களமிறக்குவது பற்றி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சி தலைவர்களை அழைத்து பேசி வருகிறார். அந்த வகையில் அவர் ஐக்கிய ஜனதாதள தலைவரும், பீகார் முதல்-மந்திரியுமான நிதிஷ் குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா உள்ளிட்டவர்களை அழைத்துப் பேசி உள்ளார்.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி நேற்று சந்தித்துப் பேசினார். இரு தலைவர்களும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து விவாதித்தனர். அப்போது காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் உடனிருந்தார் இந்த சந்திப்பு அரை மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது.
அதைத்தொடர்ந்து மம்தா பானர்ஜி, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, “காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினேன். ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து எங்கள் பேச்சு அமைந்தது. அதே நேரத்தில் வேட்பாளராக யாருடைய பெயரையும் நாங்கள் விவாதிக்கவில்லை” என கூறினார்.
டெல்லியில், சோனியா காந்தியை அவரது இல்லத்தில் மம்தா பானர்ஜி சந்தித்தபோது எடுத்த படம். உடன், ராகுல் காந்தி உள்ளார்.
மேலும், “நிறைய அரசியல் சமன்பாடுகள் உள்ளன. நாங்கள் ஒன்றாக அமர்ந்து பேசுவோம். நாங்கள் ஒன்றாக விவாதிப்போம். நாட்டுக்காக உழைக்கக்கூடிய ஒருவரை பொதுவான வேட்பாளராக தேர்வு செய்ய முன்னுரிமை அளிப்போம். அவர் நாட்டுக்கு சிறந்த வேட்பாளராக இருப்பார்” என்றும் மம்தா பானர்ஜி கூறினார்.
இதற்கிடையே காங்கிரஸ் ஊடக பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா டெல்லியில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், “எதிர்க்கட்சிகள் சார்பில் பிரணாப் முகர்ஜியை பொது வேட்பாளர் ஆக்கலாம் என்ற நிதிஷ் குமாரின் கருத்து பற்றிய காங்கிரசின் கருத்து என்ன?” என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், “பிரணாப் முகர்ஜியின் பெயரை குறிப்பிட்டதற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். அவரை ஜனாதிபதி வேட்பாளர் ஆக்குவது பற்றிய ஆலோசனை வந்திருக்கிறது. பொதுவான கருத்தொருமித்த வேட்பாளரை நிறுத்துவது பற்றி பல்வேறு கட்சிகளுடனும் ஆலோசனைகள் நடந்து வருகின்றன” என்றார்.