வடகொரியா தொடர்ந்து அணு குண்டு சோதனை, ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. தென்கொரியா அமெரிக்கா மற்றும் ஐ.நா.சபையும் கடும் எச்சரிக்கை மற்றும் பொருளாதார தடை விதித்தும் கண்டு கொள்ளவில்லை. இதனால் கொரிய தீப கற்பகத்தில் போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே தென் கொரியாவில் அதிபர் தேர்தல் நடந்தது. புதிய அதிபராக மூன்ஜெ-இன் பதவி ஏற்றார். தகுந்த நேரம் வரும் போது வட கொரியா சென்று அதன் தலைவர் கிம் ஜாங்-யங்கை சந்திப்பேன் என்று அறிவித்தார். இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான பதட்டம் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. அதை பொய்யாக்கும் விபத்தில் வட கொரியா இன்று குசாங் பகுதியில் மீண்டும் புதிய ஏவுகணை சோதனை நடத்தியது.

இந்நிலையில், வடகொரியா நடத்தியுள்ள ஏவுகணை சோதனை உலக அமைதிக்கும் பாதுகாப்புக்கும் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் என்று ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஐரோப்பிய யூனியன் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “சர்வதேச கடமைகளுக்கு வடகொரியா இணங்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடகொரியா தனது ஏவுகணை சோதனைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும். மேலும் தனது திட்டங்களை முழுவதுமாக கைவிட வேண்டும்” என்றார்.







