நாட்டின் உயரிய பாதுகாப்பு வளையத்தில் மாதா அமிர்தானந்த மயி

இந்தியாவில் முக்கிய அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பிரமுகர்களுக்கு வழங்கப்படும் இசட் பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு ஆன்மீகத் தலைவர் மாதா அமிர்தானந்த மயிக்கு வழங்கியுள்ளது.

இந்தியாவின் கேரளா மாநிலம், கொல்லத்தை தலைமையிடமாகக் கொண்ட மாதா அமிர்தானந்த மயியின் ஆன்மிக அமைப்பு சார்பில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஏராளமான மடங்கள் கல்வி நிறுவனங்கள் மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் மாதா அமிர்தானந்த மயிக்கு இசட் பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வழங்கி உள்ளது. அவரது ஆசிரமத்தில், 40 கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

யோகா குரு பாபா ராம்தேவுக்குப் பிறகு, இசட் பிரிவு பாதுகாப்பு பெறும் இரண்டாவது ஆன்மிகத் தலைவர் மாதா அமிர்தானந்த மயி என்பது குறிப்பிடத்தக்கது.