ராகவா லாரன்சின் அடுத்த படத்தில் ‘பாகுபலி’ கனெக்சன்

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 28-ந் தேதி வெளிவந்த ‘பாகுபலி-2’ படத்தின் வசூல் இந்திய திரையுலகையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்படத்தின் வெற்றிக்கு மூலகாரணமாக அமைந்தவர் ராஜமௌலியின் அப்பாவும், கதாசிரியருமான விஜயேந்திர பிரசாத் தான். இவருடைய கதையைத்தான் ராஜமௌலி படமாக எடுத்தார்.

இப்படத்தை தொடர்ந்து விஜயேந்திர பிரசாத் தற்போது விஜய் நடிப்பில் அட்லி இயக்கிவரும் புதிய படத்திற்கு கதை எழுதியிருக்கிறார். இந்நிலையில், விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ள கதையில் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இப்படத்தை ராஜமௌலியின் முன்னாள் அசோசியேட் இயக்குனர் மகாதேவ் இயக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் கதையை ஏற்கெனவே ராகவா லாரன்சிடம் சொல்லிவிட்டதாகவும், அவரும் கதையை கேட்டுவிட்டு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில், காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிப்பார் என்றும் பேசப்படுகிறது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.