சேலம்-விழுப்புரம் மாவட்ட எல்லையில், வசிஷ்ட நதியின் வடகரையில் அமைந்திருக்கிறது கூகையூர் சொர்ணபுரீஸ்வரர் கோவில். இந்த கோவிலில் காலபைரவர் சேத்திரபாலகராகவும், சொர்ணஆகர்ஷண பைரவராகவும் வேண்டுவன எல்லாம் அருளுகிறார். அவரை வழிபட பகை, பயம், வறுமை நீங்கி இழந்தவற்றை மீண்டும் பெற்று வளமுடன் வாழ்வார்கள். அஷ்டமியில் நெய்விளக்குடன் முந்திரி மாலை அணிவித்து, அபிஷேகம் செய்து அன்னதானம் செய்தால் குழந்தை பேறு கிடைக்கும். தீவினைகள் அகலும். நல் வினைகள் சேரும்.
வியாழ பகவானுக்கு அருளாசி புரிந்ததால் பொன்பரப்பின ஈஸ்வரன் (சொர்ணபுரீஸ்வரர்) எனும் திருநாமம் இங்குள்ள இறைவனுக்கு ஏற்பட்டதாக கூறுகிறார்கள். இந்த திருத்தலத்தில் உள்ள சொர்ண புரீஸ்வரரை வழிபடுபவர்களுக்கு கல்வியும், தொழிலும் சிறப்பாக அமையும் என்பது ஐதீகம். இத்தல இறைவனை வழிபட்டால் நவக்கிரக தோஷங்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது.







