பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டேவின் பதவிக்காலம் முடிவடைகிறது. எனவே, புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது.
இந்த தேர்தலில் கன்சர் வேடிங் கட்சியை சேர்ந்த பிரான்கோயிஸ் பில்லன், வலது சாரி தலைவர் மரின் லீ பென், லிபரல் சென்டிரிஸ்ட் கட்சியை சேர்ந்த இமானுவல் மக்ரான், மற்கீம் இடது சாரிகள் சார்பில் ஜீன்-லக் மெலன்சான் ஆகிய 4 பேர் போட்டியிடுகின்றனர்.
தற்போதைய மக்கள் செல்வாக்கை இழந்ததால் தற்போதைய அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டே இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.

சமீபத்தில் பாரிஸ் நகரில் போலீஸ் அதிகாரி ஒருவர் ஐ.எஸ். தீவரவாதியால் சுட்டுக்கொல்லப்பட்டார். 3 போலீசார் காயம் அடைந்தனர். எனவே, தேர்தலை சீர்குலைக்க ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்ற அச்சம் நிலவியது.
ஆகவே அங்கு பாதுகாப்பு பணியில் 50 ஆயிரம் போலீசாரும், ராணுவ வீரர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் வாகனங்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று நடைபெறும் முதல்கட்ட ஓட்டுபதிவுக்காக நாட்டின் முக்கிய இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், புதுச்சேரி உள்ளிட்ட பிரெஞ்ச் காலனி நாடுகளிலும், வெளிநாடுகளில் உள்ள பிரான்ஸ் தூதரகங்களிலும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதை தொடர்ந்து அங்கு ஏராளமான மக்கள் நீண்ட ‘கியூ’ வரிசையில் நின்று தங்கள் ஓட்டுகளை பதிவு செய்தனர்.
இன்று நடைபெறுவது முதற்கட்ட வாக்குபதிவாகும். ஓட்டுபதிவு முடிந்ததும் மாலையிலேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெறும். அதில் பதிவானதில் 50 சதவீதம் வாக்குகளை பெறுபவர் அதிபர் ஆவார்.

அதே நேரத்தில் யாருக்கும் 50 சதவீத வாக்குகள் கிடைக்காத பட்சத்தில் வருகிற மே 7-ந் தேதி 2-வது கட்டமாக வாக்குபதிவு நடைபெறும். அதில் ஏற்கனவே நடந்த தேர்தலில் அதிக வாக்குகள் பெற்ற 2 பேர் மட்டும் போட்டியிட அனுமதிக்கப்படுவார்கள்.
இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பகல் 12 மணிவரை 28.54 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக பிரெஞ்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் 28.29 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது, குறிப்பிடத்தக்கது.
மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடையவுள்ள நிலையில், இன்றைய மொத்த வாக்குப்பதிவு 50 சதவீதத்தை தொடலாம் என கருதப்படுகிறது.







