விவசாயிகளுக்கு ஆதரவாக 25-ம் தேதி பந்த்: தியேட்டர்களில் சினிமா காட்சிகள் ரத்து

வங்கிக் கடன்களை ரத்து செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் கூடுதலாக வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு தலைமையில் நடைபெறு வரும் இப்போராட்டத்திற்கு, தமிழக அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

விவசாயிகளுக்கு ஆதரவாக வருகிற 25ம் தேதி (செவ்வாய்கிழமை) மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. இதேபோல் பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், இந்த முழு அடைப்பு போராட்டத்தில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கமும் பங்கேற்கிறது. தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்களில் காலை மற்றும் பிற்பகல் காட்சிகள் ரத்து செய்யப்படும் என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.