பாட்ஷா இரண்டாம் பாகத்தை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்! சத்யா மூவீஸ்

தமிழ் சினிமா வரலாற்றில் மிகப் பெரிய வெற்றிப் படமான ரஜினியின் பாட்ஷாவின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் உள்ளதாக சத்யா மூவீஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

22 ஆண்டுகளுக்கு முன் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி, பெரும் வெற்றியைப் பெற்ற பாட்ஷா படத்தைஇ நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மெருகேற்றி மார்ச் 3 ஆம் தேதி அன்று வெளியிட்டனர்.

தமிழ் திரைலகிலும், உலகெங்கும் உள்ள தீவிர ரஜினி ரசிகர்கள் மற்றும் பொதுவான சினிமா ரசிகர்கள் மத்தியிலும் அமோக வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றது இந்த டிஜிட்டல் பாட்ஷா.

இந்த டிஜிட்டல் பதிப்பிற்கு மூல காரணமாக செயல்பட்ட தங்கராஜை ( ஆர்.எம் வீரப்பனின் மகன்) சமீபத்தில் தன் வீட்டுக்கு வரவழைத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்தினார்.

இதுகுறித்து தங்கராஜ் கூறுகையில், “தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 120 திரையரங்குகளில் இந்த டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மெருகேறிய ‘பாட்ஷா’ திரைப்படம் வெளியாகி உள்ளது. மேலும், ஐம்பது வருடம் பழமை வாய்ந்த ஒரு தயாரிப்பு நிறுவனம், 22 வருடத்திற்கு முன் தாங்கள் வெளியிட்ட அதே படத்தை மீண்டும் ஒருமுறை பிரம்மாண்டமாக வெளியிட்டிருப்பது, தமிழ் திரையுலக வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

ரசிகர்கள் மத்தியில், குறிப்பாக இளம் ரசிகர்கள் மத்தியில் இந்த டிஜிட்டல் – பாட்ஷா அமோக வரவேற்பை பெற்று இருப்பது, ரஜினி சாருக்கு அளவு கடந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது.

சமீபத்தில் ரஜினி சார் எனது தந்தையை நேரில் சந்தித்து, அவரின் ஆசிர்வாதத்தைப் பெற்றார். அவர்கள் இருவரும் பல்வேறு விஷயங்களை பற்றி பேசிய பிறகு, ரஜினி சார் என்னை இந்த பாட்ஷா படத்தின் வெற்றிக்காக வாழ்த்தியது மட்டுமின்றி, அடுத்து இதே போல் மூன்று முகம் படத்தையும் வெளியிட வேண்டும் என்று கூறினார்.

தற்போது ‘பாட்ஷா’ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்குவதற்கு நாங்கள் முயற்சித்து வருவது மட்டுமின்றி, அதற்கேற்ற கதைகளையும் கேட்டு வருகின்றோம்,” என்றார்.