ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ள `காற்று வெளியிடை’

தமிழ் சினிமாவில் தனக்குரிய தனி ஸ்டைல் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டவர் இயக்குநர் மணிரத்னம். இவரது இயக்கத்தில் வெளியான காதல் படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி பெறுவதுடன் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடிப்பவையாக இருக்கும்.

அந்தவகையில், அவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ‘ஓகே கண்மணி’ பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்டது. இதையடுத்து மணிரத்னம் தற்போது கார்த்தி – அதிதி ராவ் ஹிடாரியை வைத்து `காற்று வெளியிடை’ படத்தை உருவாக்கியுள்ளார். தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் மூலம் மணிரத்னம்இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வருகிற 7-ஆம் தேதி ரிலீசாக உள்ள இப்படம் இந்திய விமான படையின் பின்னணியில் உருவாகியுள்ள ஒரு அழகான காதல் கதையை கொண்டது. இப்படத்திற்கான சென்னை நகர வெளியீட்டு உரிமையை, பல்வேறு வெற்றி படங்களை வெளியிட்ட ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிக்கெட் புக்கிங், தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்துள்ளது.

அடுத்ததாக `பாகுபலி 2′, `செம போத ஆகாதே’ உள்ளிட்ட படங்களின் உரிமையையும்  ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனம் நிறுவனமே வாங்கியுள்ளது. மேலும் விஜய்யின் 61வது படம் மற்றும் `சங்கமித்ரா’ உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களை இந்நிறுவனமே தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.