சாதனை படைத்த யாழ் இந்துக் கல்லூரி மாணவர்கள்! 36 பேருக்கு 9A தோற்றிய அனைவரும் சித்தி

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பெறுபேற்றில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்கள் மகத்தான சாதனையை பதிவு செய்துள்ளனர்.

கடந்த வருடம் 267 மாணவர்கள் க.பொ. த சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றிய நிலையில், அனைத்து மாணவர்களும் சித்தியடைந்துள்ளதாக கல்லூரியின் அதிபர் ஐயம்பிள்ளை தயானந்தராஜா பெருமிதத்துடன் தெரிவித்தார்.

பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 36 மாணவர்கள் 9 ஏ சித்தியும், 32 மாணவர்கள் 8 ஏ,பி சித்தியும், 31 மாணவர்கள் ஏழு ஏ சித்தியையும் பெற்றுக் கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது கல்லூரியில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்த அருளானந்தம் அபிநந்தன் தேசிய ரீதியில் ஐந்தாவது இடத்தினையும், தமிழ்மொழி மூலம் முதலாமிடத்தினையும் பெற்றுள்ளார்.

இந்த மாணவன் வகுப்பறையில் மிகவும் திறமையானதொரு மாணவன். சர்வதேச ரீதியில் இடம்பெற்ற கணித ஒலிம்பியாட் போட்டிகளில் கலந்து கொண்டு பல வெற்றிகளை நிலைநாட்டியவர். அவருடைய வெற்றி எங்கள் கல்லூரிக்கு மட்டுமல்ல முழுத் தமிழினத்திற்கும் பெருமை தரும் விடயமாகும் என்றார்.