இரட்டை இலை முடக்கப்பட்ட விவகாரத்தில் பாஜகவின் சதி உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெள்ளிக்கிழமை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: மத்திய அரசு தமிழகத்தை தொடர்ந்து புறக்கணிக்கிறது. மத்திய அரசின் பாராமுகத்தை கண்டித்து மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக பாஜக வறட்சி நிவாரண நிதி குறைவை சுட்டிக்காட்டாமல் தமிழக மக்களுக்கு எதிராக குரல் கொடுப்பது வேதனை அளிக்கிறது. இந்த மனோ பாவத்தை கண்டிக்கிறோம். இதனால் தான் தமிழகத்தில் பா.ஜ.க., வளர்ச்சி அடையாமல் உள்ளது என்று கூறினார்.
மேலும், ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறுவார். இரட்டை இலை யாருக்கு கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும் சரி, நாங்கள் இரட்டை இலையை எதிர்த்துதான் போட்டியிடுகிறோம். இரட்டை இலை முடக்கப்பட்ட விவகாரத்தில் பாஜகவின் சதி உள்ளதாகவும் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டினார்.